நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் அரசின் கரம் நீள்கிறது: 7,387 நெல் விவசாயிகளுக்கும் 2,920 மீனவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கப்படுகிறது

ஷா ஆலம்: 

உயர்ந்து வரும் உற்பத்திச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நெல் விவசாயிகள், மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான சிறப்பு உதவி, மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தின் 7,387 நெல் விவசாயிகளுக்கு, அவர்கள் பயிரிடும் ஒவ்வொரு ஹெக்டேர் நெல் வயலுக்கும் 500 ரிங்கிட் பண உதவி வழங்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகை, மாநில அரசின் “சிலாங்கூர் பொருளாதார நிலைத்தன்மை வலுப்படுத்தும் தொகுப்பு – கட்டம் 1” திட்டத்தின் கீழ், நேரடியாக அக்ரோபேங்க் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

எரிபொருள் விலை உயர்வால் விவசாய இயந்திரங்களின் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும் என்று மாநில உள்கட்டமைப்பு, விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாநிலம் முழுவதும் 2,920 மீனவர்களுக்கு, மாதந்தோறும் 300 ரிங்கிட்   பெட்ரோல், டீசல் மானியம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மீனவரும் மொத்தமாக 1,800 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்.

இந்தத் திட்டத்தில் தற்போதுள்ள 2,178 மீனவர்களுடன், கூடுதலாக 742 C1 பிரிவு மீனவர்களும் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

நெல் விவசாயிகளுக்காக 8.5 மில்லியன் ரிங்கிட், மீனவர்களுக்காக 3.92 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, உணவுப் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு, உணவு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உதவித் திட்டம் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர், சிலாங்கூர் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலம் முழுவதும் உள்ள 14,131 விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், நீர்வளப் பண்ணையாளர்கள், மீனவர்களுக்கு மொத்தம் 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை மேம்படுத்தவும் மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, வேளாண்மை, மீன்பிடித் துறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset