செய்திகள் மலேசியா
3 ஆண்டுகளில் 5.37 பில்லியனை விழுங்கிய இணைய மோசடிகள்: மீட்கப்பட்டது வெறும் 10.9 மில்லியன் மட்டுமே
கோலாலம்பூர்:
நாட்டை உலுக்கும் இணைய மோசடி குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 5.37 பில்லியன் ரிங்கிட் அளவிலான அதிர்ச்சி தரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அந்தப் பெரும் தொகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டளிக்கப்பட்டது வெறும் 10.9 மில்லியன் ரிங்கிட் மட்டுமே என்பது கவலைக்கிடமான உண்மையாகும்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வெளியிட்ட தகவலின்படி, தேசிய மோசடி பதில் மையம் (NSRC) செயல்படத் தொடங்கியதிலிருந்து பல மோசடி வழக்குகளில் நிதி பறிமுதல் செய்யப்பட்டாலும், இழந்த தொகையின் மிகச் சிறிய பகுதியே உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் 1.57 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த மோசடி இழப்பு, 2025ஆம் ஆண்டில் 2.97 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே 830 மில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவாகியிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
அனைத்து மோசடி வகைகளிலும் போலி முதலீட்டு மோசடிகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்த வகை மோசடிகளால் 1.46 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு மோசடிகள் (Telecommunication Scam) நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் இழப்புகளைப் பதிவு செய்துள்ளன.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, சிலாங்கூரும் கோலாலம்பூரும் தொடர்ந்து அதிக இழப்புகளைச் சந்தித்த பகுதிகளாகத் திகழ்கின்றன. 2025ஆம் ஆண்டில் சிலாங்கூரில் 986.79 மில்லியன் ரிங்கிட்டும், கோலாலம்பூரில் 782.86 மில்லியன் ரிங்கிட்டும் மோசடிகளால் இழக்கப்பட்டுள்ளன.
இதுவரை NSRC மூலம் 32.49 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் 10.9 மில்லியன் ரிங்கிட் மட்டுமே சட்ட நடைமுறைகள் வழியாக பாதிக்கப்பட்டவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இணைய முதலீட்டு சலுகைகள், விரைவான லாப வாக்குறுதிகள், சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
“ஒரே கிளிக்கில் கோடிகளை இழக்கும் காலம் இது; விழிப்புணர்வே மிகப்பெரிய பாதுகாப்பு” என்ற எச்சரிக்கையுடன், இணைய மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் வீரன் மறு நியமனம்
June 24, 2026, 2:14 pm
14 சிறந்த மாணவர்களுக்கு BYDPA உயரிய உதவித்தொகை வழங்கப்பட்டது
June 24, 2026, 11:07 am
