நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி

கோலாலம்பூர்: 

மலேசிய ஸ்குவாஷ் உலகில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள தேசிய நட்சத்திரம் எஸ். சிவசங்கரி, உலக சாம்பியனும் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ள எகிப்தின் அமினா ஓர்ஃபியை அதிரடியாக வீழ்த்தி PSA Tour Finals இறுதிப்போட்டிக்குள் முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பாரிஸில் நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடம் வகிக்கும் சிவசங்கரி, 74 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தில் 8-11, 11-10, 11-8, 11-10 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

இந்தச் சீசனில் பிரிட்டிஷ் ஓபன், உலக சாம்பியன்ஷிப் பட்டங்களைக் கைப்பற்றிய அமினா ஓர்ஃபி, போட்டியின் முன்னணி நட்சத்திரமாக கருதப்பட்ட நிலையில், அவரைக் தோற்கடித்த சிவசங்கரியின் வெற்றி உலக ஸ்குவாஷ் அரங்கையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், மலேசிய ஸ்குவாஷ் ஜாம்பவான் டத்தோ நிக்கோல் டேவிட் பிறகு PSA Tour Finals இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டாவது மலேசிய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் சிவசங்கரி பெற்றுள்ளார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், முக்கிய தருணங்களில் எடுத்த சரியான முடிவுகளும், இறுதிவரை நேர்மறை மனநிலையைத் தக்க வைத்திருந்ததுமே வெற்றிக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.

“அமினா ஓர்ஃபி மிகவும் ஆக்ரோஷமான வீராங்கனை. அவர் ஒருபோதும் போராட்டத்தைக் கைவிட மாட்டார். அதனால் இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது. முக்கியமான புள்ளிகளில் நான் சரியான முடிவுகளை எடுத்தது வெற்றியைத் தீர்மானித்தது,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு குழுநிலைப் போட்டியிலேயே வெற்றியின்றி வெளியேறிய சிவசங்கரி, இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது அவரது அபாரமான மனவலிமை, மீளெழுச்சிக்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பட்டத்தை கைப்பற்றும் இறுதி கட்டப் போராட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை சிவசங்கரி எதிர்கொள்ளவுள்ளார். மலேசிய ரசிகர்கள் தற்போது அவரது வரலாற்றுச் சாதனையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset