நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருடப்பட்ட படகை மீட்க உதவிய இரு மலேசியர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய பாராட்டு

கோலாலம்பூர்: 

திருடப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு படகை கண்டறிந்து மீட்க உதவிய இரு மலேசியர்களுக்கு, சிங்கப்பூர் காவல்துறையின் SaferSG பொது சேவை விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புமிக்க விருது, மலேசியர்களான முஹம்மத் அஸ்ரி மனாப், கைரில் ஃபைசல் ஒத்மான் ஆகியோருக்கு, சிங்கப்பூரின் உபின் தீவின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 2ஆம் தேதி, மலேசிய கடல் எல்லையில் நங்கூரமிட்டு நின்றிருந்த சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட ஒரு படகை மீனவரான அஸ்ரி கவனித்தார். அப்பகுதியில் அத்தகைய படகு இருப்பது அரிதானது என்பதால் சந்தேகமடைந்த அவர், படகின் புகைப்படத்தை எடுத்து தனது உறவினரான கைிரிலிடம் பகிர்ந்தார்.

தகவலின் முக்கியத்துவத்தை உணர்ந்த கைிரில், உடனடியாக சிங்கப்பூர் கடற்கரை காவல்படையின் (PCG) ரோந்து படகை அணுகி தகவலை வழங்கினார். அந்தத் துல்லியமான, துரிதமான தகவலே, திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்ட படகைக் கண்டுபிடித்து மீட்பதில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அரச மலேசிய காவல்துறையின் கடல் காவல் பிரிவு (PPM) வழங்கிய ஒத்துழைப்புடன், சிங்கப்பூர் கடற்கரை காவல்படை படகை மீட்டு அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் கடற்கரை காவல்படை தளபதி ஆங் எங் செங், எல்லைகளைக் கடந்து நடைபெற்ற இந்த ஒத்துழைப்பு, குற்றத் தடுப்பு, நீதியை நிலைநாட்டும் பணியில் மலேசியா–சிங்கப்பூர் உறவின் வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

இரு மலேசியர்களின் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும், திருடப்பட்ட சொத்தை மீட்க மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset