நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் எந்த உள்கட்டமைப்புத் திட்டமும் நிறுத்தப்படாது: நந்தா உறுதி

கூச்சிங்: 

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையும் மத்திய கிழக்கு பதற்றமும் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள போதிலும், பொதுப்பணித்துறை அமைச்சின் (KKR) கீழ் முன்னெடுக்கப்படும் எந்த உள்கட்டமைப்புத் திட்டமும் இதுவரை ஒத்திவைக்கப்படவில்லை என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய செலவு உயர்வை அரசாங்கத்தால் இன்னும் சமாளிக்க முடிவதாக தெரிவித்தார்.

“கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கணிசமாக இருந்தாலும், அது திட்டங்களைப் பாதிக்கும் அளவுக்கு இன்னும் செல்லவில்லை. அனைத்து திட்டங்களும் வழக்கம்போல சீராக நடைபெற்று வருகின்றன,” என்றார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கியத் தூண்களில் கட்டுமானத் துறையும் ஒன்றாக இருப்பதால், உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமை என அவர் வலியுறுத்தினார்.

மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிடும் வகையில், கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) உடன் இணைந்து அமைச்சு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல்வேறு மூலோபாய பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிக்கக்கூடிய புவிசார் அரசியல் மோதல்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய நந்தா, தற்போதைய நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு இன்றி திட்டங்களை முன்னெடுக்கும் திறன் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்டுமானப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள், தேசிய வளர்ச்சி திட்டங்களின் வேகத்தையும் தரத்தையும் பாதிக்காத வகையில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset