நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வட கொரியாவுக்கு ட்ரோன் அனுப்பிய சர்ச்சை: தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு மேலும் 30 ஆண்டு சிறைத் தண்டனை

சியோல்: 

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவுக்கு ட்ரோன்களை அனுப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இன்று மேலும் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கியதோடு, பிராந்திய பதற்றத்தையும் தீவிரப்படுத்தியதாக வழக்குத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

 வட கொரியாவுக்கு ட்ரோன்களை அனுப்பிய நடவடிக்கை வெறும் இராணுவ நடவடிக்கை அல்ல; மாறாக, ‘போர் சூழ்நிலையைச் செயற்கையாக உருவாக்கும் முயற்சி’ என்றும், அதன் மூலம் 2024-இல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நியாயத்தை உருவாக்க முயற்சிக்கப்பட்டதாகவும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செயல் தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி மாதம் யூன் சுக் யோலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையைத் தொடர்ந்து வந்துள்ளது.

அப்போது, இராணுவச் சட்டத்தை அறிவித்து தென் கொரிய தேசிய சட்டமன்றத்தின் செயல்பாட்டை முடக்க முயன்றதாக அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.

யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ட்ரோன் நடவடிக்கைகள் வட கொரியாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்ததுடன், ட்ரோன் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவ திறன்கள் தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் கசிவதற்கும் வழிவகுத்ததாக வழக்குத் தரப்பு வாதிட்டது. இதுவே குற்றச்சாட்டின் தீவிரத்தை அதிகரித்த முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

எனினும், யூன் சுக் யோல் தனது குற்றச்சாட்டுகளை மறுத்து மேல்முறையீடு செய்துள்ளார். “நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது சட்டத்தரணிகள், ட்ரோன் நடவடிக்கைகளுக்கு யூன் நேரடியாக உத்தரவிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது வட கொரியா எல்லை கடந்துக் குப்பை நிரப்பிய பலூன்களை அனுப்பியதற்கான ‘சட்டபூர்வ தற்காப்பு நடவடிக்கை’ மட்டுமே என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ட்ரோன் பயன்பாடு தென் கொரியா – வட கொரியா உறவுகளில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் மிக முக்கிய பாதுகாப்பு விவகாரமாக மாறியுள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரியாவை நோக்கிய இந்த நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset