செய்திகள் உலகம்
இந்த வார இறுதிக்குள் போர் முடிவா?: அமெரிக்கா–இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று ஒப்பந்தம் நெருங்குவதாக டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா–இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் முக்கிய அமைதி ஒப்பந்தம், இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், “ஈரானுடனான போருக்கு மிகப்பெரிய தீர்வை எட்டியுள்ளோம். ஆவணங்கள் இறுதி செய்யப்படும் பணிகள் அடுத்த சில நாட்களில் நிறைவடையும். அதன் பின்னர் ஐரோப்பாவில் அமைதி ஒப்பந்த கையெழுத்து விழா நடைபெறலாம்,” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் “மிக விரைவில், ஒருவேளை இந்த வார இறுதியிலேயே” கையெழுத்தாகலாம் என்றும், அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “எனக்குக் கிடைத்த தகவலின்படி, அதற்கான பதில் ஆம்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தை உருவாக்க உதவிய பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், குறிப்பாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அமைதி முயற்சியில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
இதற்கிடையில், அமெரிக்கா புதன்கிழமை இரவு தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரானின் பல்வேறு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC), குவைத், பஹ்ரைன், ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
சில மணி நேரங்களுக்கு முன்புவரை ஈரான் மீது மேலும் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாக எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது அமைதி ஒப்பந்தம் நெருங்கியுள்ள நிலையில் தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றியுள்ளார்.
“இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அந்த அச்சுறுத்தல்கள் இனி பொருந்தாது,” என்று அவர் தெரிவித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்கில் புதிய அமைதிக் காலம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் அதிகரித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 12:06 pm
17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது
June 11, 2026, 10:20 am
அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது
June 10, 2026, 12:51 pm
‘டிஜிட்டல் காலனித்துவத்தின்’ கருவியாக AI மாறும் அபாயம்: அன்வார் எச்சரிக்கை
June 9, 2026, 4:28 pm
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
June 9, 2026, 4:16 pm
H1-B விசா கட்டண உயர்வு ரத்து: ட்ரம்ப்புக்கு பின்னடைவு
June 8, 2026, 10:25 am
