நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

600 இந்திய, இந்திய முஸ்லிம் உணவகங்கள் மூடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மிம்கோய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத்

கோலாலம்பூர்:

600 இந்திய, இந்திய முஸ்லிம் உணவகங்கள் மூடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிம்கோய்ன் எனப்படும் மலேசிய முஸ்லிம் இந்திய வர்த்தக, தொழிலியல் சபையின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை வலியுறுத்தினார்.

அந்நியத் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையால், நாடு முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் மிக மோசமான மூடல் அபாயத்தில் இருப்பதாக வரும் செய்திகளை மிம்கோய்ன் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.

இந்த நிலைமை இனி ஒரு உள்நாட்டுச் செயல்பாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு தொழில் நெருக்கடியாக மாறியுள்ளது.

இதற்கு அரசாங்கம், குறிப்பாக மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு உடனடியாகத் தலையிட வேண்டும்.

600 உணவகங்கள் மூடப்படவிருப்பது என்பது முதல் கட்ட எச்சரிக்கை மட்டுமே.

அண்மைக்காலத்தில் உறுதியான தீர்வுகள் எதுவும் செயல்படுத்தப்படாவிட்டால், இன்னும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதை நாம் காண வேண்டியது இருக்கும்.

உணவக உரிமையாளர்கள் சிறந்த சம்பளம், சேவையை வழங்குவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் அதிக அர்ப்பணிப்புடன் இருந்தாலும், கிடைத்த வரவேற்பு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. 

உணவு, பானங்கள் துறையில் உள்ள 3டி எனும் கடினமான, ஆபத்தான, அசுத்தமான பிரிவு, 24 மணி நேர செயல்பாடுகள் அல்லது நீண்ட வணிக நேரங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களை இன்னும் பெருமளவில் சார்ந்துள்ளது.

அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், முடக்கங்கள், அத்துடன் ஒதுக்கீடுகளுக்கு மெதுவாக ஒப்புதல் அளிப்பது ஆகியவை தொழில்முனைவோரின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளன. 

பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைக்கவோ, வணிக நேரங்களைக் குறைக்கவோ, அல்லது குறைந்தபட்ச திறனில் இயங்கவோ நிர்பந்திக்கப்பட்டுள்ளன, இது இறுதியில் தொடர்ச்சியான இழப்புகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்புகளும், உள்ளூர் மூலப்பொருள் வழங்குநர்களுக்கான தேவைக் குறைவும், அரசாங்கத்தின் வரி வருவாய்க் குறையும்.

ஆகவே ஒரு குறுகிய கால தீர்வாக, குறிப்பாக இந்த முக்கியமான உணவு, பானத் துறையை இலக்காகக் கொண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான ஒதுக்கீட்டுத் தேவைகளை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது தளர்த்த வேண்டும்.

குறிப்பாக இந்தத் துறையைக் காப்பாற்றுவதற்கான ஒரு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க, அமைச்சகத்திற்கும் இந்திய முஸ்லிம் வணிக சங்கங்களுக்கும் இடையே உடனடியாக ஒரு வட்டமேசை கலந்துரையாடல் அமர்வை அரசு நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset