நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவில் வெடித்த பெரும் நிதி மோசடி சர்ச்சை: முறைகேட்டில் சிக்கிய ஊழியர்களை அதிரடியாக நீக்கிய TM

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகோம் மலேசியா (TM), அதன் அமெரிக்க கிளை நிறுவனமான TM USA Inc-இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மில்லியன் டாலர் நிதி மோசடி விவகாரத்தில் சிக்கிய முன்னாள் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

TM வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபர்களின் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து நிறுவனமே உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்ததாகவும், அந்த விசாரணையின் முடிவில் கடுமையான நடவடிக்கையாக பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பகிரப்பட்டதாகவும், தற்போது இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறை (DOJ), அந்நாட்டு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் TM குறிப்பிட்டுள்ளது.

“நிறுவன ஆளுகை, வெளிப்படைத்தன்மை, ஒழுக்கநெறி ஆகியவற்றில் TM எந்தவித சமரசத்தையும் ஏற்காது. முறைகேடுகளுக்கு எங்களிடம் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை அமலில் உள்ளது,” என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவலின்படி, TM-யின் அமெரிக்க துணை நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் உயர் அதிகாரிகள் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முஹம்மத் ஹாஃபிஸ் லோக்மான், முஹம்மத் யூசைமி யூசோஃப், கான் துவோங் நுயென் ஆகியோர், பொய்யான ஆவணங்கள், போலி பதிவுகளைப் பயன்படுத்தி நிறுவன நிதியைச் சட்டவிரோதமாக மாற்றியதோடு, அமெரிக்காவில் உள்ள வணிக கூட்டாளிகள், சப்ளையர்கள், தணிக்கையாளர்கள், மேற்பார்வையாளர்களையும் ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

2020 ஜூலை முதல் 2026 பிப்ரவரி வரை நீடித்ததாகக் கூறப்படும் இந்த மோசடி சம்பவம், தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset