நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜப்பானில் மலேசிய யானைகள்; பராமரிக்கச் சென்றனர் 3 அனுபவம் வாய்ந்த பாகன்கள்

தெமர்லோ: 

ஜப்பானின் ஒசாகாவிலுள்ள தென்னோஜி (Tennoji) உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட தாரா, அமோய், கெலாட் ஆகிய மூன்று மலேசிய யானைகளைப் பராமரிப்பதற்காக, கோலா கண்டா தேசிய யானை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த மூன்று அனுபவம் வாய்ந்த பாகன்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இக்குழுவில் செ வோங் (Che Wong) பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த அலி காடோங் என்பவருடன் சுஹைமி இப்ராஹிம், முஹம்மத் ஃபைசல் அஹ்மத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 15 முதல் அங்கு தங்கியுள்ள இவர்கள், யானைகளின் உடல்நலம், அன்றாடப் பராமரிப்பைக் கவனித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் இந்த யானைகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாதுகாப்பு மையத்தின் தலைவர் செ கு முஹம்மத் ஜம்சூரி விளக்கம் அளித்துள்ளார். 

ஜப்பானில் இருந்து தினசரி பெறப்படும் வீடியோக்கள், தொழில்நுட்ப அறிக்கைகள், யானைகள் புதிய சூழலுக்கு மிகவும் ஆரோக்கியமாகப் பழகி வருவதை உறுதிப்படுத்துகின்றன. 

யானைகளின் கண்களில் வடியும் நீரைச் சோகத்தின் அறிகுறி எனக் கருதுவது தவறு என்றும், அது கண்களில் உள்ள தூசியை அகற்றும் ஒரு இயல்பான உடல் இயக்கமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

யானைகளின் ஆரோக்கியத்திற்குச் சான்றாக, அவற்றின் உடல் எடை கடந்த இரண்டு மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கெலாட் என்ற யானையின் எடை 250 கிலோ வரை அதிகரித்துள்ளது. முறையான உணவு, சிறந்த பராமரிப்பு காரணமாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் பூங்கா நிர்வாகத்தின் தேவைக்கேற்ப, இந்தப் பாகன்களின் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த அலி காடோங் போன்றவர்களின் பாரம்பரிய அறிவு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset