நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

‘வெற்றி நாள்’ கொண்டாட்டத்தின் இடையே கோரம்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

கீவ்: 

உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வரும் மே 9-ஆம் தேதி ரஷ்யா தனது 'வெற்றி நாளைக்' கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது ரஷ்யாவின் உச்சக்கட்ட நயவஞ்சகத்தைக் காட்டுகிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஸபோரிஷ்யா (Zaporizhzhia), கிராமடோர்ஸ்க் (Kramatorsk) மற்றும் டினிப்ரோ (Dnipro) ஆகிய நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், சப்போரிஷியாவில் மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர். 

ராணுவ ரீதியாக எந்த அவசியமும் இல்லாத இடங்களில் பொதுமக்கள் மீது ரஷ்யா வன்முறையைப் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் தொலைபேசி வாயிலாகப் போர்ச் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினர். 

எனினும், உக்ரைன் போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருந்தபோதும், ரஷ்யா தொடர்ந்து மோதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்தக் கோரத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

சில மணி நேரக் கொண்டாட்டத்திற்காக மட்டும் போர்நிறுத்தம் செய்வதை விடுத்து, அன்றாடம் நடத்தப்படும் இத்தகைய கொடூரத் தாக்குதல்களை ரஷ்யா நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என அதிபர் ஜெலென்ஸ்கி உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset