நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் நிகழ்ந்த விபத்தில் இளம் தாய் மரணம்

மலாக்கா:

இங்குள்ள ஜாலான் உஜோங் பாசிர் சாலையில் 21 வயதான இளம் தாய் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய கோரமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அதிகாலை சுமார் 3.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரான நூர் அலேயா நடாஷா ரோஸ்லான், தலை,  காலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் இரண்டு வயது குழந்தையை விட்டுச் சென்றுள்ளார் எனத் தெரிய வருகிறது.

மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பதிட் கூறுகையில்,

குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் 23 வயதான நபர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

காரின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.  மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக அவர் காவலில் வைக்கப்பட்டார்.

சிறுநீர் பரிசோதனையில் காரின் ஓட்டுநர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டது.

மேலும் பகுப்பாய்விற்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset