செய்திகள் உலகம்
அமீரகத்தில் ஏவுகணை முழக்கம்: முறிந்ததா அமைதி ஒப்பந்தம்?
டெஹ்ரான்:
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெற்றதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யூ.ஏ.ஈ) உள்ள மலேசியர்கள் பதற்றத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். அமைதியான நாளொன்றின் நடுவில், உயிர் பாதுகாப்புக்கான போராட்டம் தொடங்கும் அந்த சில நிமிடங்கள், அங்குள்ள மக்களின் மனநிலையைச் சிதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
40 வயதான நூருல் ஐன் ஹாரோன், யூ.ஏ.ஈ-வின் பாதுகாப்பு அமைச்சு, அந்தப் பிரதேசத்தின் கடல் எல்லை வான்வெளியில் கண்டறியப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்றை வெற்றிகரமாக முறியடித்ததாக உறுதிப்படுத்தியதாகவும், மற்றொன்று கடலில் விழுந்ததாகவும் கூறியதாகத் தெரிவித்தார்.
தனது கைப்பேசியில் அவசர எச்சரிக்கை அறிவிப்புகளை இரண்டு முறை பெற்ற பதட்டமான தருணத்தைப் பகிர்ந்து கொண்ட நூருல் ஐன், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இது முதல் முறையாக நிகழ்வதால், தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
கைப்பேசியில் திடீரென ஒலித்த அவசர எச்சரிக்கை, அச்சத்தின் முதல் அலைபோல் இருந்தது. சில நிமிடங்களுக்குள் வானில் முழங்கிய வெடிப்புச் சத்தங்களும், வேகமாக பறந்த ஜெட் விமானங்களின் கர்ஜனையும், அங்கிருந்த ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் உறைய வைத்தது.
“ஒரு கணம் நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். அடுத்த கணம், உயிர் பாதுகாப்புக்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்,” என்ற அவரது வார்த்தைகள், அங்குள்ள மக்களின் மனக்குழப்பத்தை வெளிப்படுத்துகின்றன.
ஏப்ரல் 8, 2026 அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே செய்யப்பட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பதிவான முதல் தீவிர மீறலாகக் இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது. இதற்கு முன்னர், அந்தப் பகுதியில் உச்சகட்ட பதற்றத்தைக் குறைக்கும் வகையில், பாகிஸ்தான் ஒரு இடைத்தரகராக முயற்சி செய்ததன் மூலம், போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
யூ.ஏ.ஈ-வின் தேசிய அவசர நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் “பாதுகாப்பான இடம்” என்ற வார்த்தையே இந்நேரத்தில் பலருக்கு ஒரு கேள்வியாக மாறியுள்ளது.
தொடர்புடைய முன்னேற்றங்களில், ஃபுஜைரா அரசாங்க ஊடக அலுவலகம், ஒரு ட்ரோன் தாக்குதலின் விளைவாக, ஃபுஜைரா பெட்ரோலியத் தொழில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் கடல்சார் அதிகாரிகள், டுபாய்க்கு வடக்கே 36 கடல் மைல் தொலைவில், ஒரு சரக்குக் கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு அறிக்கையைப் பெற்றுள்ளனர். இருப்பினும், உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
