நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மூன்று உயிர்களைப் பறித்த மர்ம வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தீவிர விசாரணை

ஜெனீவா:

அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணியர் கப்பல் ஒன்றில் 'ஹண்டாவைரஸ்' தொற்று பரவியுள்ளதை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. 

இதுவரை ஆறு பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இக் கப்பல் கேப் வெர்டே (Cape Verde) கடற்கரைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கப்பலில் மொத்தம் 150 பயணிகள், ஊழியர்கள் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகள் அனைவரும் தத்தமது அறைகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கப்பலில் தூய்மைப் பணிகள், கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட இருவரைச் சிகிச்சைக்காக நெதர்லாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்ல உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டாவைரஸ், மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது கழிவுகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும்போது இந்தத் தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது. 

இருப்பினும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்தத் தொற்று பரவுவது மிக அரிதான ஒன்று என்பதால், பொதுமக்களுக்கான சுகாதார அச்சுறுத்தல் தற்போது குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து இந்த வைரஸ் பரவலுக்கான மூலக்காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவசரக்கால நிதியுதவியுடன், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியவும் உலக சுகாதார நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset