நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலி விசா மோசடியில் சிக்கிய ஹஜ் யாத்திரிகர்கள்: ஜெட்டா ஹஜ் நடவடிக்கை இயக்குநர் எச்சரிக்கை  

ஜெட்டா: 

2015 ஆம் ஆண்டில், செல்லாத விசாக்களைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதால், விமான நிலையத்தில் சிக்கித் தவித்த, ஏற்கனவே இஹ்ராம் கட்டிய 30 மலேசிய ஹஜ்  பயணிகளின் கதையானது, வருங்கால பயணிகளுக்கு எப்போதும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

அந்தப் பயணிகள், குறுக்கு வழி மூலம் ஹஜ்ஜைச் செய்யும் வாய்ப்பை உறுதியளித்த, அதிகாரப்பூர்வமற்ற பயணத் தொகுப்புச் சலுகைகளால் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுவதாக ஜெட்டா ஹஜ் நடவடிக்கை இயக்குநர் டருல் நைன் அபுபக்கர் தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், பொருந்தக்கூடிய பெயர்கள், புகைப்படங்களுடன் நம்பத்தகுந்ததாகத் தோன்றினாலும், சவூதி அரேபிய குடிநுழைவு அமைப்பின் சோதனைகள், அவர்களின் பெயரில் அந்த விசாக்கள் செல்லாதவை, பதிவு செய்யப்படாதவை என்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

"வெளிப்புறமாக, எல்லாம் சரியாகத் தெரிகிறது. இருப்பினும், அமைப்பில், அது இல்லை அல்லது அவர்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால்தான், அவர்கள் தொடர்ந்து நுழைய அனுமதிக்கப்படவில்லை" என்று நேற்று இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பிரதிபலித்த டருல் நைன், ஒரு அறிக்கையைப் பெற்றதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக, தாமும், தூதரக அதிகாரிகளும் உடனடியாக விமான நிலையத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

அனைத்துப் பயணிகளும் பூரணமாக இஹ்ராம் கட்டியிருப்பதைக் கண்டதும், சூழ்நிலை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், ஹஜ் கடமையைச் செய்ய அவர்கள் தயாராக இருந்ததாகவும் அவர் கூறினார்.

"அவர்கள் மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் வந்தனர். சிலர் முதல் முறையாக வந்தனர், சிலர் நீண்ட காலமாகக் காத்திருந்தனர். இருப்பினும், இறுதியில், அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது" என்றார் அவர்.

பயணிகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியில், அவர்களை சிறைகளில் வைக்கப்படாமல் இருக்க, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் மலேசிய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறினார்.

"பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்படும் வரை, அவர்கள் விமான நிலையத்தின் ஒரு சிறப்புப் பகுதியில் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டனர். மிகவும் கடுமையான விதிமுறைகளின் சூழ்நிலையில், நாங்கள் உதவ முடிந்தது அவ்வளவுதான்" என்றார் அவர்.

"இந்த அனுபவம் நமக்குப் போதுமான பாடத்தைத் தருகிறது. ஹஜ் விஷயங்களில், விதிமுறைகளுக்கு இணங்குவது மிக முக்கியமான விஷயம், அதை இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

அதன்படி, புனித நிலத்திற்கு எளிதாக நுழைவதை உறுதியளிக்கும், சந்தேகத்திற்கிடமான சலுகைகளில் எளிதில் ஈடுபட வேண்டாம் என்றும், மிகவும் கவனமாக இருக்குமாறு டருல் நைன் வருங்கால பயணிகளை நினைவூட்டினார்.

"தாபுங் ஹாஜி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களைப் பயன்படுத்துங்கள். குறுக்கு வழிகளை எடுக்க வேண்டாம், ஏனெனில் ஆபத்து மிக அதிகம்" என்றார் அவர்.

உள்ளூர் மக்கள் உட்பட ஒவ்வொரு நுழைவாயிலிலும் பல அடுக்கு சோதனைகள் மூலம், கட்டுப்பாடுகள் இப்போது இறுக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். 

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பயணிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான ஹஜ் நடவடிக்கையில், ஒட்டுமொத்த பயணத்தின் பாதுகாப்பு, சுமூகத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான அம்சம், விதிமுறைகளுக்கு இணங்குவதாகும் என்று டருல் நைன் கூறினார்.

"விசா விஷயங்களில் சமரசத்திற்கு இடமில்லை. அது செல்லாது என்றால், இங்கு வர நிறைய தியாகங்களைச் செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.

ஹஜ் செய்யத் தவறுவதைத் தவிர, பயணிகள், நிதி இழப்பு, சவூதி அரேபிய அதிகாரிகளால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளிட்ட பிற அபாயங்களையும் எதிர்கொள்கின்றனர் என்றார் அவர். இது, எதிர்காலத்தில் அந்த நாட்டிற்குப் பயணிப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset