நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்

இஸ்கண்டார் புத்திரி: 

மலேசியாவின் அன்னாசித் தொழில்துறையில் ஜொகூர் மாநிலம் தொடர்ந்து முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 10,366 ஹெக்டேர் பரப்பளவில் அன்னாசி பயிரிடப்பட்டுள்ளது. 

இது நாட்டின் மொத்த சாகுபடிப் பரப்பளவில் பாதிக்கும் மேலானது ஆகும். ஆண்டுக்கு சுமார் 280,000 மெட்ரிக் டன் அன்னாசிப்பழங்களை உற்பத்தி செய்யும் இம்மாநிலம், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 63.7 விழுக்காட்டை வழங்கி, ஆண்டுக்கு RM680 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது.

இத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தெற்கு மண்டல அளவிலான அன்னாசித் தொழில்துறை மதிப்புச் சங்கிலி குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது. 

இதில் பேசிய மலேசிய அன்னாசித் தொழில்துறை வாரியத்தின் (LPNM) தலைமை இயக்குநர் முஹம்மத் கைருசம்ரி, அன்னாசித் தொழில் இப்போது வெறும் பழ உற்பத்தியோடு நின்றுவிடாமல், உணவு பதப்படுத்துதல்,கழிவுப் பொருட்களைப் பயன்படுத்திப் புதிய பொருட்களைத் தயாரித்தல் எனப் பல கிளைகளாக விரிவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், 100 விவசாயிகள், தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். 

இதில் நவீன வேளாண் முறைகள், பூச்சி மேலாண்மை, இணையவழித் தொழில்நுட்பப் பயன்பாடு (IoT), ஹலால் சான்றிதழ், சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்துப் பேசிய ஜொகூர் மாநில வேளாண் குழுத் தலைவர் டத்தோ ஜஹாரி சரிப், அன்னாசித் தொழில்துறை மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். 

அன்னாசி சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி, உலகச் சந்தையில் ஜொகூர் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தொழில்முனைவோரை வலியுறுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset