நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்

பெட்டாலிங் ஜெயா: 

பல தசாப்தங்களாக மலாக்காவில் நியோன்யா லக்சா, நாசி அயாம் பொங்டே மூலம் உணவுப் பிரியர்களின் மனதை வென்ற "டொனால்ட் & லில்லி" உணவகத்தின் பாரம்பரியம், இன்று புதிய வடிவில் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. குடும்பத்தின் மூன்று தலைமுறைப் பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ள "Roots & Petals" முயற்சி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

1980-களில் டொனால்ட் டான், லில்லி லீ ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்தக் குடும்ப வணிகம், தெருவோர தள்ளுவண்டி விற்பனையிலிருந்து 2012-இல் கோத்தா ஷாபந்தாரில் பிரபல உணவகமாக வளர்ந்தது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த உணவகம் 2021 இறுதியில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.

உணவகத்தின் மூடல் ஒரு காலகட்டத்தின் முடிவாகத் தோன்றினாலும், ஜெனிபர் டானுக்கு அது ஒரு புதிய படைப்பாற்றல் அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது. குடும்பத்தின் சமையல் பாரம்பரியத்தை மலாக்காவின் பெண்டாஹாரி சந்தைக்கு கொண்டு சென்ற அவர், பின்னர் தனது தாய் லில்லி லீ, மகள் லி யிங்குடன் இணைந்து கலை, கைவினைப் பொருட்களை மையமாகக் கொண்ட புதிய முயற்சியை உருவாக்கினார்.

கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான "Roots & Petals" என்ற பெயரில், குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

73 வயதான லில்லி லீ குரோஷே கைவினைப் பொருட்களை உருவாக்குகிறார். 23 வயதான லி யிங் டிஜிட்டல் ஓவியங்கள், ஸ்டிக்கர்கள், நேரடி கேரிகேச்சர் வரைபடங்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார். ஜெனிபர் டான் லினோகட் அச்சுக் கலைப் படைப்புகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார்.

“ரூட்ஸ் என்பது எங்கள் குடும்பத்தின் அடித்தளமான என் தாயை குறிக்கிறது; பெட்டல்ஸ் என்பது என்னையும் என் மகளையும் குறிக்கிறது,” என ஜெனிபர் டான் விளக்குகிறார். கலை வடிவங்கள் வேறுபட்டிருந்தாலும், குடும்பமாக இணைந்து செயல்படுவதுதான் இந்த முயற்சியின் உண்மையான பலம் என அவர் கூறுகிறார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்த முயற்சி மாறியுள்ளது. “எதையும் விற்கவில்லை என்றாலும் பரவாயில்லை; ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்,” என்று ஜெனிபர் கூறுகிறார்.

தனது தாய் சுறுசுறுப்பாகவும், மகள் ஒரு கலைஞராக தன்னம்பிக்கையுடன் வளர்வதையும் பார்ப்பது மிகப்பெரிய திருப்தியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், டொனால்ட் & லில்லியின் பாரம்பரியம் முடிவுக்கு வரவில்லை. சமையல் மரபிலிருந்து கலை உலகத்திற்குப் பயணித்த இந்த மூன்று தலைமுறைப் பெண்களின் கதை, குடும்பத்தின் மதிப்புகளும் மரபுகளும் காலத்தைத் தாண்டி புதிய வடிவங்களில் தொடர்ந்து மலர முடியும் என்பதை நிரூபிக்கிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset