நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது

தானா மேரா: 

மர்மமான முறையில் பயணித்த ஒரு வாகனத்தை வழிமறிக்க முயன்றபோது, காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதி தப்பிக்க முயன்ற நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

தானா மேராவின் தெப்பி சாவா பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறையினர் நடத்திய சோதனையில், பிடிபட்ட அந்த நபருக்கு ஏற்கனவே 13 குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்தது.

மாலை சுமார் 5.57 மணியளவில், சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்தனர். வயல்வெளிப் பகுதிக்குச் சென்றபோது, அந்த நபர் திடீரென வாகனத்தை நிறுத்தி, மிக வேகமாகப் பின்னோக்கி இயக்கி காவல்துறை வாகனத்தின் முன்பகுதியை மோதினார். 

மேலும், காவல்துறையினரை அச்சுறுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் வாகனத்தை இயக்கித் தாக்க முயன்றதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முஹம்மத் ஹக்கி ஹஸ்புல்லா தெரிவித்தார்.

காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அந்த நபர் ஒத்துழைக்காத நிலையில், தற்காப்பு கருதி காவல்துறையினர் அந்த வாகனத்தின் பின் சக்கரங்களை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வாகனம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, எவ்விதக் காயமுமின்றி அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அந்த நபர் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரைத் தாக்கித் தப்பிக்க முயன்றதால், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset