நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை

கோத்தா கினபாலு: 

அண்மையில் உணவகம் ஒன்றில் எஞ்சிய உணவுகளைச் சிறுவர்கள் போட்டிப்போட்டு எடுக்கும் காணொலி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால், சபாவில் இத்தகைய "தெருவோரக் குழந்தைகள்" அன்றாடக் காட்சியாகிவிட்டனர். முறையான ஆவணங்கள் இல்லாத இந்தக் குழந்தைகள், பசியை மறக்க 'குளு' (Glue) எனும் பசையை மோப்பம் பிடிப்பதும், பிச்சையெடுப்பதும், பழைய பொருட்களைச் சேகரிப்பதும் எனத் தங்கள் பிழைப்பைக் கழிக்கின்றனர். பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த அவலம், சமூக ஊடகங்களால் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடல் வாழ்வை நம்பி வாழ்ந்த "பஜாவ் லாவுட்" (Bajau Laut) எனப்படும் கடல் நாடோடிகளே இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தின் (ESSZone) கட்டுப்பாடுகள், கடல் பூங்காக்களின் விரிவாக்கம் காரணமாக இவர்களது வாழ்விடம் சுருங்கியுள்ளது. 

இதனால் கடலில் இருந்து நிலத்திற்கு இடம்பெயர்ந்த இவர்கள், பிழைப்புத் தேடி நகரங்களுக்கு வரும்போது "நாடற்றவர்களாக" (Stateless) அடையாளப்படுத்தப்பட்டு, கடும் வறுமையில் சிக்குகின்றனர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க அரசு தற்காலிகப் பாதுகாப்பு மையங்களை அமைத்து, குழந்தைகளுக்குக் கல்வி, சுய பராமரிப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

இது போன்ற உதவிகள் பிச்சையெடுக்கும் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி, குழந்தைகளைச் சுரண்டலுக்கு ஆளாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்கள் இல்லாதவரை இந்தக் குழந்தைகள் வறுமைச் சுழலிலிருந்து மீள்வது கடினம் என அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வாக, கடல் நாடோடிகள் மீண்டும் தங்கள் பாரம்பரிய வாழ்வாதாரத்தைத் தொடர குறிப்பிட்ட கடல் பகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இவர்களை வெறும் குடியேறிகளாகப் பார்க்காமல், மனிதநேயத்துடனும் கலாச்சாரச் செழுமையின் அங்கமாகவும் அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset