செய்திகள் வணிகம்
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
வாஷிங்கடன்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றம் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், உலக எண்ணெய் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.
ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் 2.7 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு AS111ஆக இருக்கிறது. அதேநேரத்தில், மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 2.2 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு AS98 ஆக இருக்கின்றது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது தேசிய பாதுகாப்புக் குழு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தெஹ்ரானின் முன்மொழிவுகளை ஆராய்ந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லீவிட் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த முன்மொழிவு வாஷிங்டன் தனது தடைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விரோதங்களை நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், செஞ்சுரி ஃபைனான்சியலின் தலைமை முதலீட்டு அதிகாரி விஜய் வலேச்சா, எண்ணெய் சந்தையின் குறுகிய கால வாய்ப்புகள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், மேல்நோக்கிய போக்கைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
AS108 முதல் AS110 வரையிலான எதிர்ப்பு நிலைகளைத் தொடர்ந்து கடப்பது, ஒரு பீப்பாய்க்கு AS112 முதல் AS115 வரையிலான வரம்பிற்கு மேலதிக உயர்வை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், மோதலைத் தணிப்பதற்கான ஒரு பாதையாக, ஈரானின் முன்மொழிவுகளைக் கருத்தில் கொள்வதற்கு டிரம்ப் தயாராக இருக்கிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், "100 சதவீத முழுமையான" ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே, தடைகளைத் தளர்த்தும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்படும் என்று அவர் முன்னர் வலியுறுத்தினார்.
லீவிட், ஈரான் மீதான வாஷிங்டனின் சிவப்புக் கோடுகள் தெளிவாக இருப்பதையும் வலியுறுத்தினார். அதே நேரத்தில், எதிர்வரும் காலத்தில் டிரம்ப் அந்த விஷயம் குறித்து மேலும் கருத்துரைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், லிபோவ் ஆயில் அசோசியேட்ஸின் தலைவர் ஆண்டி லிபோவ், மோதல் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், எண்ணெய் சந்தை மீண்டும் நிலைப்படுவதற்கு நேரம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடல் கண்ணி வெடி அகற்றுதல், டேங்கர் போக்குவரத்து சீரமைப்பு, உற்பத்தி, சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மீட்டெடுத்தல் போன்ற செயல்முறைகள் நீண்ட காலத்தை எடுக்கும் என்றார் அவர்.
விநியோகத்தில் தாமதங்களைக் கருத்தில் கொண்டு, நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டுமே உலக எண்ணெய் சந்தை முழுமையாக நிலைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
