நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய் கைவிட்ட சிறுவன்: அரவணைக்க முன்வந்த பராமரிப்பாளர்

சிப்பாங்: 

மூன்று சொந்தக் குழந்தைகளைக் கொண்ட சிலாங்கூர் குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவர், தனது உயிரியல் தாயால் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுவனைத் தத்தெடுக்கும் செயல்பாட்டில் உள்ளார்.

புத்ரா பெர்டானாவில் வசிக்கும் 30 வயதுக் கடந்த டிஜி செ நோர் ஹக்கிமா முடா, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தச் சிறுவனைப் பராமரித்து வருவதாக ஹரியான் மெட்ரோ நேற்றிரவு செய்தி வெளியிட்டது.

"வாரத்தில் ஒரு நாள் விடுமுறையுடன், முழுநேரப் பராமரிப்புக்கான கட்டணம் மாதம் 800 ரிங்கிட் என்று 20 வயதுக் கடந்த அந்தப் பெண்ணிடம் நான் தெரிவித்தேன்" என்று அவர் மேற்கோள் காட்டப்பட்டார்.

அந்தத் தாய், ஏப்ரல் மாத தொடக்கத்தில் 100 ரிங்கிட்  மட்டுமே செலுத்தியதாகவும், குழந்தையைத் திரும்ப அழைத்துச் செல்லும்படி கேட்டபோது பதிலளிப்பதை நிறுத்திவிட்டதாகவும், இதனால் தான் புத்ரா பெர்டானா நிலையத்தில் போலிஸ் புகார் செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

தனது கணவர், குடும்பத்தினருடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, அந்தச் சிறுவனை முறையாகத் தத்தெடுக்கும் முடிவுக்குத் தன்னை வழிநடத்தியதாக செ நோர் தெரிவித்தார்.

"நான் ஏப்ரல் 10 ஆம் தேதி குழந்தையின் தாயைத் தொடர்பு கொண்டேன், குழந்தையைத் தத்தெடுக்க அவள் ஒப்புக்கொண்டாள்" என்று அவர் தெரிவித்தார்.

அதன்பின்னர், தத்தெடுப்பு நடைமுறைகளைத் தொடங்குவதற்காக அவர் இருமுறை சமூக நலத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

மூன்று முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளை ஏற்கனவே கொண்டுள்ள செ நோர், அந்தச் சிறுவன் தங்கியிருந்த போது, தான் அவனுடன் உணர்ச்சிபூர்வமாகப் இணைந்துவிட்டதாகக் கூறினார்.

"அவனுக்குப் பெற்றோரின் அன்பு கிடைக்காதது குறித்து நான் வருந்துகிறேன். அவன் தங்கியிருந்த போது, நான் அவனை நேசிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு இரவும் என்னுடன் தூங்குகிறான்" என்றார் அவர்.

செ நோரின் கூற்றுப்படி, அந்தச் சிறுவனுக்குப் பேசுவதில் தாமதம் இருப்பதாகத் தெரிகிறது.

தத்தெடுப்பு அங்கீகரிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு அவனைப் பள்ளியில் சேர்க்கவும், மருத்துவப் பரிசோதனைகளை ஏற்பாடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அச்சிறுவனின் தாய் குழந்தையைச் சந்திப்பதைத் தடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset