நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புலாவ் அங்சாவில் பரபரப்பு: அழுகிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

கோலாலம்பூர்: 

சிலாங்கூர், ஜெராம் பகுதியில் உள்ள புலாவ் அங்சாவில், அழுகிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், அப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தை அடுத்துச் சென்று பார்த்தபோது, தார்பாயால் சுற்றப்பட்ட நிலையில் இந்தச் சடலத்தைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் அந்தத் தார்பாயைப் பிரித்துப் பார்த்தபோது, அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிய நிலையில் ஓர் ஆடவரின் உடல் உள்ளே இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புஞ்சாக் ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இன்று காலை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அந்த நபர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்களோ அல்லது தங்களின் உறவினர்கள் எவரேனும் காணாமல் போயிருந்தாலோ, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி அசிஸ்டென்ட் சூப்பரின்டென்டென்ட் கைரோல் ஹிஷாம் ஷம்சுதீனை 03-32891222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset