நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் அதிரடி சோதனை: 64 ஆடுகளைச் சட்டவிரோதமாகக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

ஈப்போ: 

பேராக் மாநிலத்தின் தாப்பா அருகே உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 64 ஆடுகளை மாநிலக் கால்நடை மருத்துவச் சேவைத் துறையினர் (JPV) வெற்றிகரமாகக் கைப்பற்றினர். 

'ஓப் கொர்பான் தெகாஸ் 2026' என்ற அதிரடிச் சோதனையின் போது, சுமார் RM30,000 ரிங்கிட் மதிப்பிலான 37 செம்மறியாடுகள், 27 வெள்ளாடுகள் ஒரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிளாந்தான் மாநிலத்திலிருந்து சிலாங்கூர் நோக்கிச் சென்ற அந்த லாரி, அதிகாரிகளின் கண்ணில் படாமல் இருக்க லாரியின் பின்புறத்தைத் தார்பாய் கொண்டு முழுமையாக மூடி மறைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

தொடக்க நிலையில், இந்த ஆடுகளின் உரிமையாளர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த போதிலும், காவல்துறையினரின் உதவியுடன் அவர் இணங்க வைக்கப்பட்டார். ஹரிராயா ஹாஜி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக முறையான ஆவணங்கள் இன்றி இந்த ஆடுகள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு RM15,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

பண்டிகை காலத்தை முன்னிட்டு, முறையான அனுமதி இன்றி ஆடுகள் இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய தீவிரச் சோதனைகள் வரும் பண்டிகை நாள் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset