நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விதிமுறைகளை மீறிய மணல் அகழ்வுப் பணி; நெகிரி செம்பிலான் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை

சிரம்பான்:

சிரம்பான், கம்போங் ஜிஜான் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வுப் பணிகள், நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) பின்பற்றாத காரணத்தால் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்துப் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன், விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், சேதமடைந்த ஆற்றுத் கரைகளைச் சீரமைக்கும் முழுச் செலவையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த மணல் அகழ்வுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, ஏற்கனவே ஒருமுறை நீர்ப்பாசன, வடிகால் துறையினால் (JPS) இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

குடிநீர் ஆதாரங்களுக்கு அருகாமையில் மணல் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் தற்போது நிரந்தரமாகப் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்தத் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கத் தவறியதற்காக நீர்ப்பாசன, வடிகால் துறைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் மணல் எடுக்கப்படுவதால் ஆற்றுக்கரை பலவீனமடைந்து மண் அரிப்பு ஏற்படுவதாகவும், இது பொதுமக்களின் நிலங்களுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். 

அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அரசின் இந்த அதிரடி நடவடிக்கை தங்களுக்கு நிம்மதி அளிப்பதாகப் பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்று வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு சமரசம் செய்துகொள்ளாது என்றும், அனைத்து தொழில்நுட்பத் துறைகளின் அனுமதியின்றி இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்றும் மாநில அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset