நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.ஆர்.டி தண்டவாளத்தில் தந்திரமானத் திருட்டு; மரங்கள், விளம்பரப் பலகைகள் மூலம் ஊடுருவும் கேபிள் திருடர்கள்

கோலாலம்பூர்: 

மலேசியாவின் எம்.ஆர்.டி (MRT) இரயில்வே உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துச் செயல்படும் கேபிள் திருட்டுக்கும்பல், பாதுகாப்புப் படையினரின் சோதனைகளிலிருந்து தப்பிக்கப் புதிய உத்திகளைக் கையாண்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அதிகாரிகளுக்கும் இந்தக் கும்பலுக்கும் இடையே தொடர் 'பூனை-எலி' வேட்டை நடந்து வருவதாகப் பிரசரானா (Prasarana) மலேசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்தப்படும் இடங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் இத் திருடர்கள், தங்கள் திருட்டு முறைகளைத் தொடர்ச்சியாக மாற்றி வருகின்றனர். 

முன்னதாக தரைவழிப் பாதைகள் வழியாகத் தண்டவாளங்களுக்குள் நுழைந்த இவர்கள், தற்போது மேம்பாலப் பகுதிகளில் உள்ள விளம்பரப் பலகைகள், உயரமான மரங்களைப் பயன்படுத்தித் தண்டவாளங்களுக்குள் ஊடுருவுகின்றனர். 

இவ்வாறு மேலிருந்து கீழே இறங்குவதன் மூலம், தரைமட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கண்ணில் படாமல் இவர்கள் தப்பித்து விடுகின்றனர்.

தண்டவாளப் பகுதிக்குள் நுழைந்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள்ளேயே அதிவேகமாக கேபிள்களை வெட்டி, கீழே காத்திருக்கும் தங்கள் கூட்டாளிகளிடம் வீசிவிட்டு இவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்துவிடுகின்றனர். 

சில நேரங்களில் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கத் தண்டவாளப் பாதையில் உள்ள மறைவான இடங்களிலேயே பதுங்கியிருப்பதாகவும் பிரசரானா நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி இஸ்கந்தர் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த நூதனத் திருட்டுகளைத் தடுக்கப் பிரசரானா நிறுவனம் தற்போது தனது கண்காணிப்பு வளையத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தரைவழி ரோந்துப் பணிகளுடன், இரயில்வே மேம்பாலப் பகுதிகளிலும் நவீனக் கண்காணிப்புக் கருவிகள் மூலம் தீவிரக் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

திருட்டுக்கும்பல்களின் ஒவ்வொரு நகர்வையும் முறியடிக்கப் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset