நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாங்காக் நோக்கிச் சென்ற ரயிலில் சைபு பறிமுதல்: 3 மலேசியர்கள் கைது

பாங்காக்: 

வடகிழக்கு தாய்லாந்து மாநிலமான கோன் கேனில், பாங்காக்கிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் இருந்து சுமார் 97 கிலோகிராம் கிரிஸ்டல் மெதாம்பேட்டமைன் (சைபு) ஒரு கூட்டு நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று மலேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டதாக நேற்று போலிஸார் தெரிவித்தனர்.

மத்திய விசாரணைப் பணியகம் (சி.ஐ.பி.) ஒரு அறிக்கையில், நோங் காயிலிருந்து பாங்காக்கில் உள்ள க்ருங் தெப் அபிவாட் மத்திய நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயிலில், போதைப்பொருள்களைக் கொண்ட உரிமை கோரப்படாத மூன்று சூட்கேஸ்களை அதிகாரிகள் கண்டுபிடித்த பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ரயில் சேவைகளில் குற்றங்களை ஒழிப்பதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தாய்லாந்து மாநில ரயில்வே (SRT), குற்றத் தடுப்புப் பிரிவு, நெடுஞ்சாலை போலிஸ் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சி.ஐ.பி. தெரிவித்தது.

"ஏப்ரல் 8 ஆம் தேதி, கோன் கேன் மாநிலம் வழியாகச் சென்ற போது, ரயில் பெட்டியில் ஒன்றில் உள்ள சாமான்கள் அடுக்கில், கலவைப் பூட்டுகளுடன் கூடிய மூன்று பெரிய கருப்பு பைகளை ரோந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

"ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்தப் பைகளைத் தாங்கள் வைத்திருப்பதாக எந்தப் பயணியும் ஒப்புக்கொள்ளவில்லை, இது மேலதிக விசாரணைக்கு வழிவகுத்தது" என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

நோங் காய் நிலையத்தில் அந்தப் பைகளை எடுத்துச் சென்ற மூன்று ஆண்கள் ரயிலில் ஏறியதை ரயில்வே ஊழியர்கள் உறுதிப்படுத்தியதாகவும், சிசிடிவி காட்சிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகவும், அவர்கள் பின்னர் அதே பெட்டியில் அமர்ந்திருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் சி.ஐ.பி. தெரிவித்தது.

அந்த மூன்று ஆண்களும் சம்பந்தப்பட்ட சாமான்களைத் தாங்கள் எடுத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டதாகவும், இருப்பினும் அவற்றின் உள்ளடக்கம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், மாறாக வேறு ஒரு தரப்பினரால் அந்தப் பைகளைப் பாங்காக்கிற்கு அனுப்புமாறு பணிக்கப்பட்டதாகவும் கூறியதாக சி.ஐ.பி. தெரிவித்தது.

"சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், மேலதிக நடவடிக்கைக்காக கோன் கேனில் உள்ள போன் போலிஸ் நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன" என்று சி.ஐ.பி. தெரிவித்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset