நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குர்பான் பிராணிகளே இல்லாமல் கண்ணீரில் மூழ்கும் காசா: மூன்றாவது ஆண்டாக வேதனையான ஈதுல் அத்ஹா பெருநாள்

காசா:

போர், பசி, முற்றுகை ஆகியவற்றால் சிதைந்துள்ள காசாவில், இந்த ஆண்டும் அய்டிலாடா மகிழ்ச்சியின்றி கொண்டாடப்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, குர்பான் பிராணிகளை வாங்க முடியாத சூழலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள் துயரத்தில் மூழ்கியுள்ளன.

அக்டோபர் 2023 முதல் நீடித்து வரும் போரால், காசாவின் கால்நடைத் துறை முற்றிலும் சீரழிந்துள்ளதாக அங்குள்ள வேளாண் அமைச்சு தெரிவித்துள்ளது. பண்ணைகள், கால்நடை வைத்திய மையங்கள், தீவனக் கிடங்குகள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான மாடுகள், ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அய்டிலாடாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள் காசாவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விநியோகம் முழுமையாக முடங்கியுள்ளது. எல்லைப் பாதைகள் மூடப்பட்டதால், உயிருடன் உள்ள கால்நடைகள், தீவனம், மருந்துகள் என அனைத்தும் ‘பூஜ்ஜிய நிலைக்கு’ சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போருக்கு முன்பு சுமார் 1,190 ரிங்கிட் மதிப்பில் இருந்த ஒரு ஆட்டின் விலை, தற்போது 15,000 முதல் 19,000 ரிங்கிட் வரை உயர்ந்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாதாரண மக்கள் குர்பான் செய்வது கனவாக மாறியுள்ளது.

“பல ஆண்டுகளாக புதிய இறைச்சியையே பார்க்கவில்லை” என காசா மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பல குடும்பங்கள் தற்போது குறைந்தளவான உணவு உதவியையே நம்பி வாழ்வதாகவும், துல்ஹிஜ்ஜா நாட்களை பிரார்த்தனை, நோன்புடன் கடக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது தனது பண்ணையையும் டஜன் கணக்கான கால்நடைகளையும் இழந்ததாக ஒரு வணிகர் தெரிவித்துள்ளார். “இப்போது எங்களிடம் எதுவும் இல்லை… உயிர் பிழைப்பதே பெரிய போராட்டமாகிவிட்டது” என அவர் வேதனை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, காசா மக்களுக்காக சர்வதேச அமைப்புகள் எல்லை தாண்டிய குர்பான் உதவித் திட்டங்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. போர் முடிந்து, முற்றுகை நீங்கும் நாளையே காசா மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset