நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரபல ஷாவ்லின் கோவில் முன்னாள் தலைவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை

ஜெங்ஜோ:

பிரபல ஷாவ்லின் கோவிலின் முன்னாள் தலைவர் ஷி யோங்சின், ஊழல் குற்றச்சாட்டுகளில்  24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்ஸியாங் நகர மத்திய மக்கள் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, லியு யிங்செங் என்ற இயற்பெயர் கொண்ட ஷி, துரோகம், நிதி துஷ்பிரயோகம், அரசு சாரா ஊழியராக இலஞ்சம் பெறுதல், இலஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

2003 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், ஷாவ்லின் கோவிலின் தலைவராகவும், அந்தக் கோவிலின் கீழ் உள்ள ஒரு நல அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றிய போது, அவர் கோவிலுக்கும், அந்த அறக்கட்டளைக்கும் சொந்தமான பணம், சொத்துக்களைச் சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ தவறாகப் பயன்படுத்தப்பட்ட பணம், சொத்துக்களின் மதிப்பு 131 மில்லியன் யுவான்களை (சுமார் AS$19.2 மில்லியன்) மீறியது.

2012 முதல் 2022 வரை, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, கோவில், அதன் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிதிகளை யிங்செங் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அது 151 மில்லியன் யுவான்களை மீறியதாகவும் கண்டறியப்பட்டது. மேலும், மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பணத்தை திரும்பச் செலுத்தத் தவறியுள்ளார்.

ஜூலை 2006 முதல், அந்த நபர், பிறருக்கு கோவில் கட்டுமானத் திட்டங்கள், தொடர்புடைய வணிக வாய்ப்புகளைப் பெறுவதில் உதவுவதற்காகத் தனது நிலையைப் பயன்படுத்தியதாகவும், அதற்குப் பதிலாக ரொக்கப் பணம், மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது. இவை அனைத்தும் 11.63 மில்லியன் யுவான்களுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளன.

கூடுதலாக, 1995 முதல் 2022 வரை, சட்டவிரோத நன்மைகளைப் பெறுவதற்காக, அரசு ஊழியர்களுக்கு இலஞ்சமாக 5.67 மில்லியன் யுவான்களுக்கும் அதிகமான பணம், மதிப்புமிக்க பொருட்களை அவர் வழங்கியதாக நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மிகப் பெரிய தொகை, மிகவும் தீவிரமான ஊழல் குற்றங்கள், நீண்ட காலமாகத் தொடர்ந்த குற்ற நடத்தை ஆகியவை அடங்கும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது. இது, கடுமையான தீங்கையும் மிகவும் எதிர்மறையான சமூக தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, கடுமையான தண்டனை வழங்குவது சட்டத்திற்கு இணங்க பொருத்தமானது.

இருப்பினும், யிங்செங் தனது குற்றங்களை நேர்மையாக ஒப்புக்கொண்டதாகவும், விசாரணையாளர்களுக்கு முன்னர் தெரியாத பல குற்ற உண்மைகளைத் தானாக முன்வந்து வெளிப்படுத்தியதாகவும், மேலும் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பிற்கு எதிராகத் தான் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

யிங்செங் மே 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் தனது இறுதி வாக்குமூலத்தில் வருத்தம் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset