நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மருந்து விநியோகம் நிலையாக உள்ளது: நீண்டகால நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்துகிறது

ஷா ஆலம்: 

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் மருந்து விநியோகம் தற்போது நிலையாக உள்ளதாகத் தெரிகிறது. மேலும், விநியோகதேதில் எந்தவ்இடையூறும் இல்லை என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் எம்எம்ஏ தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ கூறினார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் பல மாதங்களுக்கு போதுமான மூலப் பொருட்கள், முடிக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. இது நாட்டின் சுகாதாரத் துறைக்கு நேர்மறையான முன்னேற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், தேசிய பொருளாதார நடவடிக்கை சபைக் (MTEN) கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, நாட்டின் மருந்து, மருத்துவ சாதன விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எம்எம்ஏ ஆதரிப்பதாக அவர் கூறினார்.

தற்போதைய அறைகூவல்களை எதிர்கொள்வதில் அந்த நடவடிக்கைகள் முக்கியமானவை  என்று அவர் கூறினார்.

"எடுக்கப்பட்ட அணுகுமுறைகளில், முக்கியமான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தொடர்ந்து அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு அணுகல் பாதையை (Special Access Pathway) செயல்படுத்துவதும் அடங்கும்.

"கூடுதலாக, மையப்படுத்தப்பட்ட பங்கு கண்காணிப்பு, இறக்குமதி ஆதாரங்களின் பன்முகத்தன்மை, அவசர பதில் நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

தேசிய மூலோபாய இருப்புப் பங்குகளை நிறுவுவதற்கான திட்டமிடல், MyMedSecure மூலம் மருந்து பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவது ஆகியவை நடுத்தர, நீண்டகாலத்தில் முக்கியமான நடவடிக்கைகளாகக் கருதப்படுவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், உலகளாவிய சூழ்நிலை இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. மேலும் தற்போதைய நிலைமையை முழுமையாக நம்பியிருப்பது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்த எம்எம்ஏ மூன்று முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

முதலாவதாக, குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (NEML) உள்ள மருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இரண்டாவதாக, நோயாளிகளின் சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, கிளினிக்குகள், மருத்துவமனைகள் உட்பட தனியார் துறையுடன் விநியோக நிலை குறித்த தகவல்களை மிகவும் வெளிப்படையாகவும் செயலூக்கமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, நாட்டின் சுகாதார இறையாண்மையை நோக்கிய ஒரு நீண்டகால நடவடிக்கையாக, மலேசியா கட்டமைக்கப்பட்ட, தொடர்ச்சியான முறையில் உள்ளூர் மருந்து உற்பத்தி திறனை மேம்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.

"தடங்கலின்றி தேவையான சிகிச்சைகள், மருந்துகளை மலேசிய மக்கள் அணுகுவதை உறுதி செய்வதற்காக, எம்எம்ஏ தொடர்ந்து சுகாதார அமைச்சு, MTEN, அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset