நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, செவ்வாய்க்கிழமை இங்குள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மூன்று ஆண்களின் கலவரத்தால் அந்த உரை தடைபட்டது.

இச்சம்பவம் மதியம் 2.45 மணியளவில் நிகழ்ந்தது. அப்போது, அமர்ந்திருந்த இரண்டு ஆண்கள் திடீரென பதாகைகளை ஏந்தியபடி அஸாமை நோக்கி நடந்தனர்.

அந்த நபர்களில் ஒருவர் கத்திக்கொண்டே மேடையை நோக்கி விரைய முயன்றதால், மண்டபச் சூழல் பதற்றமானது.

எவ்வாறாயினும், அந்த நபர் அங்கிருந்த உதவிப் போலிஸார், எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளால் மண்டபத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

கத்திய, அஸாம் மீது அதிருப்தி என எழுதப்பட்ட பதாகையை ஏந்திய அந்த நபருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு ஆணும், அங்கு பணியாற்றியவரின் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்திய வண்ணம் காணப்பட்டார்.

எவ்வாறாயினும், உரையாற்றிக் கொண்டிருந்த அஸாம் அமைதியாக இருந்தார், மேலும் தனது உரையை முடிக்கும் வரை தொடர்ந்தார்.

மேலும், உடனடி பதிலடியாக மண்டபச் சூழலை மீண்டும் மகிழ்ச்சியூட்டும் வகையில் மாற்றவும் அவர் முயன்றார்.

"உங்கள் டிவி ஒளிபரப்பை மாற்ற வேண்டாம்" என்று அவர் அமைதியாக நகைத்துவிட்டு, பின்னர் தனது உரையைத் தொடர்ந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர்கள், அந்த இரண்டு நபர்களும் 'மண்டிரி' என எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்திருந்ததைக் கண்டனர்.

மதியம் 2 மணிக்குத் தொடங்கிய அந்தக் கருத்தரங்கு, ஆசியா இ-பல்கலைக்கழகம் (AeU), உலக வர்த்தக மையம் ஆகியவற்றுடன் இணைந்து எஸ்.பி.ஆர்.எம்.-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் திட்டம், நிறுவன மாற்றம் குறித்த எஸ்.பி.ஆர்.எம்.-இன் அனுபவங்களையும் பார்வையையும் பகிர்ந்து கொள்வதையும், ஊழல் ஒழிப்பு முயற்சிகளில் முன்னோக்கிய நடவடிக்கையாக கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், நேர்மையான தலைமுறையை உருவாக்குவதில் கல்வியின் பங்கு குறித்து விவாதிப்பதும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகள் குறித்த சமூகப் பொறுப்பை வளர்ப்பதும் இந்தக் கருத்தரங்கின் நோக்கங்களாக இருந்தன.

அந்த நிகழ்ச்சியில் ஆசியா இ-பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நூர் ராய்ஹான் அபு ஹமிட், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ ரோஸ்மாம் முஹம்மத்,  பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊழல் குறித்த சிறப்புக் குழு உறுப்பினருமான யங் சைஃபுரா ஒத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset