நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்

மலாக்கா: 

செவ்வாய்க்கிழமை இங்குள்ள ஜாலான் பெர்டாம் மலிமுக்கு அருகில் உள்ள பஜார் மாராவுக்கு முன்புறம் செங்கை நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு ஆண்கள் காயமடைந்தனர்.

காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 50, 60 வயதுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்கள் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டனர்.

தனியார் துறை ஊழியரான ஷாஹ்ரிஸால் அஹ்மத் (வயது 48), ஒரு பெரும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதைத் தொடர்ந்து, தான் வேலை செய்யும் கட்டிடத்திலிருந்து இந்தச் சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். அந்தக் கட்டிடம் சம்பவ இடத்திலிருந்து 40 மீட்டர் தொலைவில் இருந்தது.

"ஒரு புரோட்டான் சாகா FLX கார் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்த சிலர் காயமடைந்ததையும் காண முடிந்தது.

"சில பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வெளியே வந்தனர், சிலர் சொந்தமாகவே வெளியே வந்தனர்" என்று அவர் செவ்வாய்க்கிழமை கூறினார்.

இதற்கிடையில், நடவடிக்கைத் தளபதி பி.பி.கே. I சிஹான் தாஹிர், காலை 9.31 மணிக்கு அவசர அழைப்பைத் தாம் பெற்றதாகவும், அதன் பின்னர் செங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தீ விபத்து, ஒரு டொயோத்தா வியோஸ், மெர்சிடிஸ், டடானோ வகை கிரேன், பெரோடுவா பெஸ்ஸா, புரோட்டான் சாகா FLX ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோதலுக்குப் பிறகு ஏற்பட்டதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

"தீயானது புரோட்டான் சாகா FLX காரில் ஏற்பட்டது. அதன் சேதம் 90 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

"தீயணைப்புப் படை தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. காலை 9.46 மணிக்குத் தீயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டது. நடவடிக்கை காலை 11.11 மணிக்கு முழுமையாக முடிவுற்றது" என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset