நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி நிறுவனங்களில் ஏஐ (AI) வசதி: 3,000 மாணவர்களை இலக்காகக் கொண்ட புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

குவாந்தான்: 

மலேசியா டிஜிட்டல் பொருளாதார நிறுவனம் (MDEC) மூலம் மலேசியா இஸ்லாமிய முன்னேற்ற துறையுடன் (ஜாக்கிம்) இணைந்து, தொழில்நுட்ப அறிவு மட்டுமல்லாமல், விமர்சன சிந்தனை, புதுமையான தலைமுறையையும் உருவாக்கும் நோக்கில் நாட்டில் உள்ள சில முன்னோட்ட நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) டிஜிட்டல் வசதிகளை அரசாங்கம் வழங்கவுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

இந்தத் திட்டம் கெடா, கிளந்தான், நெகரி செம்பிலான், பஹாங், பேராக், பினாங்கு என்ற ஆறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

ஆரம்பக்கட்டமாக, நாட்டில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களிலிருந்தான மாணவர்கள் உட்பட 3,000 மாணவர்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு, விமர்சன சிந்தனை, டிஜிட்டல் புதுமை திறன்களுக்கு வெளிப்படுத்துவதை இந்த முன்முயற்சி இலக்காக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குவாந்தான் நகர மாற்றமடைவு மையத்தின் (UTC) வளாகத்தில் நடைபெற்ற ஹிம்புனான் அனாக் பஹாங் மடானி 2026 நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் பஹாங் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், இளைஞர், விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹம்மத் தாவ்பிக் ஜொஹாரி, தேசிய முதன்மை செயலாளர், டான் ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வெள்ளியன்று தொடங்கிய மூன்று நாள் கூட்டத்தில் 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

எனினும், செயற்கை நுண்ணறிவு உட்பட புதிய தொழில்நுட்பம் மனித மதிப்புகளை சிதைக்கும் நிலையில் இருப்பது அர்த்தமற்றது என்று அன்வர் நினைவுபடுத்தினார்.

"அதனால்தான் நமக்கு ஒழுக்கம், கலாச்சாரம் முக்கியம் என்று நினைவுப்படுத்துகிறேன். சகோதர சகோதரிகளுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நல்ல உறவு முக்கியம்.

"வெறுப்பையும் இகழ்ச்சியையும் ஒருவரை ஒருவர் அவமதிப்பதையும் விட்டுவிடுங்கள்." என்று அவர் வலியுறுத்தினார்.

இளைய தலைமுறை நாட்டின் எதிர்காலத்திற்கான தூணாக உயர்ந்த புரிதலைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் கல்விக்கு மிகப்பெரிய ஒதுக்கீடு வழங்குவதாகவும் அன்வர் கூறினார்.

"கல்வி என்பது வெறும் சான்றிதழ் அல்லது பட்டம் பெறுவதற்காக மட்டுமல்ல, நேர்மறையாக சிந்திக்கக்கூடிய மனிதனாக மாறுவதற்கானது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில், இங்கு கம்போங் புக்கிட் பே ரூட்டில் உள்ள புட்சால் மைதானத்தை மேம்படுத்த RM600,000 ஒதுக்கீட்டை அன்வர் அறிவித்தார்.
இங்கு சுங்கை காராங்கில் உள்ள புசாட் பெங்காஜியான் இஸ்லாம் ரிபாட் அல்-முஸ்தஃபா தஃப்பிஸ் மாணவர்களுக்கு புதிய கற்றல் கூடம் வசதிக்கு RM500,000 ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது.

குவாந்தான், இந்திரா மஹ்கோத்தா சட்டமன்றத்தில் B40 மாணவர்களுக்கு ஆதரவாக காசோலை வழங்கியதோடு, 2025 பஹாங் மாநில எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பிரதமர் பரிசு வழங்கினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset