நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சண்டிகரில் பரபரப்பு: பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

சண்டிகர்:

சண்டிகரின் செக்டர் 37-இல் அமைந்துள்ள பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைமையகத்திற்கு வெளியே, நேற்று மாலை 5 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மர்ம நபர் ஒருவரால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு வெடித்ததில், அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஒரு காரின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. ]இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' (BKI) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், சீக்கிய இளைஞர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய புலனாய்வு முகமை (NIA), தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் வெடிகுண்டைப் போன்ற பொருளை வீசிவிட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாகர், இந்தச் சம்பவம் மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் முயற்சி என்று சாடியுள்ளார். 

தற்போது சண்டிகர் காவல்துறையின் குற்றப்பிரிவு, சிறப்புப் படையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகச் சண்டிகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாதுகாப்புத் தரப்பினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset