நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பீதி

ஜகார்த்தா: 

இந்தோனேசியாவின் வட மலுக்கு பகுதியில் உள்ள டெர்னேட் தீவு அருகே, இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், மலுக்குக் கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், இதனைத் தொடர்ந்து 5.0 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகள் மீண்டும் ஏற்பட்டன. 

இதன் விளைவாக, வட மலுக்கு, வடக்கு சுலவேசி மாகாணங்களுக்கு இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. ஹவாயைத் தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் அபாயகரமான அலைகள் எழக்கூடும் என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்தோனேசியாவின் சில பகுதிகளில் அலைகள் ஒரு மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என்றும், மலேசியா, தைவான், ஜப்பான், பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளின் கடற்கரைகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான அலைகள் தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த சுலவேசி மாகாண மக்கள், அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த அதிர்வுகளால் பெரிய அளவிலான சேதங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெர்னேட் பகுதியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 

தற்போது ஜப்பானிய வானிலை ஆய்வு மையமும் சிறிய அளவிலான அலைகள் எழக்கூடும் எனக் கணித்துள்ள நிலையில், கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset