நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இணையக் கட்டுப்பாட்டை மீறிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு கடும் எச்சரிக்கை

ஜகார்த்தா:

சிறுவர்களை இணையதளத்தில் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா (Meta), கூகுள் (Google) ஆகியவற்றிற்கு இந்தோனேசிய அரசு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த மார்ச் 28 முதல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த இந்தோனேசியத் தகவல், டிஜிட்டல் விவகார அமைச்சர் மெயுத்யா ஹஃபித், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் வயதுக் கட்டுப்பாட்டை அமல்படுத்தாத காரணத்தால் இந்த நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அதே வேளையில், எக்ஸ் (X) , பிகோ லைவ் (Bigo Live) ஆகிய நிறுவனங்கள் தங்களது தளங்களில் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணுகுமுறையைக் கட்டுப்படுத்தி, புதிய சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

டிக்டாக் (TikTok), ரோப்லாக்ஸ் (Roblox) ஆகிய நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை இன்னும் வழங்கவில்லை என்றாலும், இதற்கான முயற்சிகளை எடுத்து வருவதால் அவற்றுக்கு முதற்கட்டமாக எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தோனேசியாவை வெறும் சந்தையாக மட்டும் பார்க்காமல் அந்நாட்டுச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவில் சுமார் 7 கோடி சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி வருவதால், அவர்களின் நலன் கருதி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்குச் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் இணையத்தில் செலவிடும் சிறுவர்களைக் கண்காணிக்கவும், விதிகளை மீறும் தளங்கள் குறித்துப் புகார் அளிக்கவும் பெற்றோர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset