நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள்: ஈரானின் அணுசக்தி வளங்களைக் குறிவைக்கும் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்:

ஈரான் மீதான அமெரிக்காவின் ஒரு மாத கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுக்கவில்லை.

வெனிசுலாவில் செய்தது போலவே, ஈரானின் எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதியைத் தனது நீண்டகாலக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே டிரம்பின் முதன்மை நோக்கமாக இருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புத் திட்டம் எண்ணெய் வளத்தோடு மட்டும் நின்றுவிடாமல், ஈரானின் அணுசக்தி வளங்களையும் குறிவைப்பதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக, ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டியுள்ள ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்ற டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

இதற்காக அமெரிக்காவின் 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறப்புப் படை வீரர்கள் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானின் இஸ்ஃபஹான், நடன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள நிலத்தடி வசதிகளில் சுமார் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியம், அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய நிலையிலுள்ள 200 கிலோகிராம் யுரேனியம் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய 12 நாள் போருக்குப் பிறகு, இந்த அணுசக்தி நிலையங்களைக் கைப்பற்றுவதே டிரம்பின் அடுத்த இலக்காக உள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. வாஷிங்டனுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வருவதால், டொனால்ட் டிரம்ப் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாகவே இருக்கும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset