நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்கள் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த அரசு

பெட்டாலிங் ஜெயா: 

மலேசியாவின் மாமாக் உணவகங்கள் சில பொருட்களுக்கு 30 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள புகாரை அடுத்து, அது குறித்து விளக்கம் அளிக்க மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்திற்கு உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த விலையேற்றம் தொடர்பான விரிவான விளக்கம், ஆதாரங்கள்;  தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் அமலாக்கப் பிரிவு அந்தச் சங்கத்தைப் பணித்துள்ளது.

உள்நாட்டு, சர்வதேச நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளத் தொழில்துறையினருடன் இணைந்து செயல்பட அரசு தயாராக இருந்தாலும், நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது என்று துணை அமைச்சர் புசியா சலே தெரிவித்துள்ளார்.

முறையற்ற விலை உயர்வு கண்டறியப்பட்டால், 2011-ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாட்டு, லாபமீட்டல் எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி, பிரெஸ்மா (Presma) தலைவர் டத்தோ மொசின் அப்துல் ரசாக் விடுத்த அறிக்கையில், உலகளாவிய பொருளாதார நெருக்கடி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, சில பொருட்களின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இருப்பினும், பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இந்த கூடுதல் சுமையைச் சுமந்து வருவதாகவும், உணவுகளின் விலையை உயர்த்தாமல் பராமரிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. உணவக உரிமையாளர்களின் தரப்பு நியாயங்களைக் கேட்டறிந்த பிறகு, அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவு விலையில் ஏற்படும் தேவையற்ற மாற்றங்களைத் தவிர்க்கக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset