நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மார்ச் 31 முதல் அனைத்து நாட்டு நுழைவு வாயில்களிலும் படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்படும்

புத்ராஜெயா: 

மார்ச் 31 முதல் நாட்டின் அனைத்து வான், நிலம், கடல் நுழைவு வாயில்களிலும் தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பு (NIISe) படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் (KDN) தெரிவித்தது.

 குடியேற்ற அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது அமைவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

"இந்தச் செயல்படுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முன்னோட்ட திட்டமாக தொடங்கப்படும்: ஜொகூரின் செனாய் சர்வதேச விமான நிலையம் (வான் முறை), மார்ச் 31, 2026; புக்கிட் புங்கா ICQS (குடியேற்றம், சுங்கம், தனிமைப்படுத்தல்,பாதுகாப்பு) வளாகம் (நிலம் முறை), மே 31, 2026; புத்ரி ஹார்பர் சர்வதேச படகு முனையம் (கடல் முறை), ஜூன் 30, 2026" என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 2025 முதல் கடந்த பிப்ரவரி வரை நடந்த சோதனை கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் விரிவாக்குவதற்கான அமைப்பின் தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் படிப்படியான செயல்படுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சகம் மேலும் கூறியது.

சோதனை காலத்தில் மைனிஐஸ் மொபைல் பயன்பாட்டை உருவாக்கி வெளியிடுதல், முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் இ-கேட் வசதிகளை நிறுவுதல் ஆகிய உயர் தாக்க மூலோபாய முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன.

மேலும், சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் (BSI)  சுல்தான் அபு பக்கர் வளாகம் (KSAB) போன்ற முக்கிய நாட்டு நுழைவு வாயில்களில் QR குறியீடு பயன்பாட்டைச் செயல்படுத்துதல், முன்கூட்டிய பயணி திரையிடல் அமைப்பை (APSS) செயல்படுத்துதல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, புத்ராஜெயா, கூச்சிங், கோத்தா கினாபாலுவில் தேசிய குடியேற்ற கட்டளை மையம் (NICC) நிறுவப்பட்டதோடு, உயர்தர தரவு மையம் (DC), பேரிடர் மீட்பு மையம் (DRC) மூலம் தரவு உள்கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டது.

"இந்தச் செயல்படுத்தலின் வெற்றி உற்சாகமளிக்கும் பயன்பாட்டு அளவாலும் ஆதரிக்கப்படுகிறது.

"மார்ச் 17 வரை, மைனிஐஸ் பயன்பாடு 6,16,730 மலேசியர்கள், 2,46,946 சிங்கப்பூர் குடிமக்கள் உட்பட 8,97,673 பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன் 17,80,425 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

"மேலும், BSI, KSAB-ல் QR குறியீடு அமைப்பும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது, இது பயணிகளின் போக்குவரத்தை விரைவாகவும் திறமையாகவும் கையாளும் அமைப்பின் திறனை நிரூபிக்கிறது" என்று அமைச்சகம் தெரிவித்தது.

மைனிஐஸ் செயல்படுத்தல் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் குடியேற்ற சேவை வழங்கலை மேம்படுத்தவும் உள்ள மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று உள்துறை அமைச்சு கூறியது.

அதனால், நடைமுறையில் வரும் படிப்படியான முழு செயல்படுத்தலின் போது குடியேற்ற நடைமுறைகள் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்த, பொதுமக்கள் மைனிஐஸ் பயன்பாட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset