நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மலேசியாவின் எண்ணெய் விநியோகத்தை அரசு தினசரி கண்காணிக்கும்”: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மலேசிய அரசு தினந்தோறும் கண்காணித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், வரும் மே மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இன்றைய தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற நாடுகளில் எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு நிலவினாலும், மலேசியாவில் இதுவரை அத்தகைய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார். 

தற்போதைய இக்கட்டான சூழலில் தேவையற்ற அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, மக்களின் நலன், நாட்டின் பொருளாதார தன்மையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றிச் செல்ல அனுமதி அளித்ததற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அவர்களுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அனுமதி மலேசியாவின் வெளிநாட்டு எரிசக்தி வணிகம் தடையின்றி நடைபெற மிக முக்கியமான ஒன்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோனாஸ் நிறுவனம் பிரேசில், சுரினாம், கனடா போன்ற நாடுகளிலும் தனது முதலீடுகளை விரிவுபடுத்தியுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் சர்வதேச முதலீடுகள் மூலம் நாட்டிற்கு நிலையான வருவாயைப் பெற்றுத் தரவும் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்தார். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset