நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறண்ட நீர்வீழ்ச்சிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்

யான்: 

கெடா மாநிலத்தின் யான் பகுதியில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை, நீண்ட கால வறட்சி காரணமாக, புகழ்பெற்ற ஜெராய் மலை அடிவாரத்திலுள்ள நீர்வீழ்ச்சிகள் வறண்டு காணப்படுகின்றன. 

குறிப்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டிடி ஹயூன் பகுதியில், தற்போது நீரோட்டம் மிகக் மெதுவாகவும், ஆங்காங்கே சிறிய குட்டைகளாகவும் மட்டுமே காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

நீர்வீழ்ச்சி வறண்டு போனதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அப்பகுதி வியாபாரி அர்ஜுனாவதி ரம்லி தெரிவித்துள்ளார். இதனால் தனது உணவக வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மலையில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் சமைப்பதற்கான நீரைத் தனது வீட்டிலிருந்தே சுமந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். விடுமுறை நாட்களில் கூட கூட்டம் இல்லாததால் உள்ளூர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த ஆண்டு நிலவும் வறட்சி கடந்த ஆண்டை விட மிக மோசமாக இருப்பதாக அர்ஜுனாவதியின் கணவர் ஜாஃபர் ஹனஃபியா குறிப்பிட்டுள்ளார். கடுமையான வெப்பத்தினால் துரியான் மரங்களின் பூக்கள் உதிர்ந்து வருவதாகவும், பயிரிடப்பட்ட காய்கறிகள் வாடி வருவதாகவும் அவர் கூறினார்.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகத் தங்கள் குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள், தண்ணீர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய வெப்ப நிலை ஒரு இயற்கை பேரிடர் போல உணரப்படுவதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக இந்த வாரம் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். 

நீரோட்டம் வறண்டதால் அந்தப் பகுதியே களையிழந்து காணப்படுகிறது. மலேசியாவின் பல பகுதிகளில் நிலவும் இந்த அசாதாரண வெப்ப நிலை, விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset