நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்காளதேசத்தில் கோர விபத்து: 40 பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

டாக்கா:

வங்காளதேசத்தின் ராச்பாரி மாவட்டத்தில், பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தௌலதியா படகுத் துறையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, படகில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி பத்மா ஆற்றில் விழுந்து மூழ்கியது.

சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மூழ்கிய பேருந்தை மீட்பதற்குத் தீயணைப்பு, மீட்புப் படையினர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர். பேருந்து வெளியே எடுக்கப்பட்டபோது, அதன் உட்புறத்தில் சிக்கியிருந்த ஏழு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 

படகுத் துறையில் இருந்த போது படகு பலமாக மோதியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் விழுந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த தருணத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகளில் ஒரு சிலர் மட்டுமே நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற பயணிகள் பலர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த போது பேருந்திலிருந்து சில பயணிகள் ஏற்கனவே இறங்கியிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வல்லுநர்கள் குழுவை அரசு நியமித்துள்ளது. மாயமான மற்ற பயணிகளைக் கண்டுபிடிக்கும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset