நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் விலை உயர்வின் தாக்கம்: வட மாநிலங்களில் 100 சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் முடங்கும் அபாயம்

அலோர் ஸ்டார்: 

டீசல் விலை உயர்வு, அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக, மலேசியாவின் வட மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 100 சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் தங்களது வணிகத்தை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

பேராக், கெடா, பினாங்கு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்த நிறுவனங்கள், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 4.72 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வட மண்டல சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அஹமது ரஸ்லான் அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

இந்த விலையேற்றம் காரணமாகப் பயணக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், சுற்றுலா முகமைகள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது முன்பதிவுகளைத் ரத்து செய்து வருகின்றன. 

இதுவரை சுமார் 50 விழுக்காடு முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அஹ்மத் ரஸ்லான், இது நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவிய கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைப் போன்றதொரு இக்கட்டான நிலையைத் தற்போது தாங்கள் எதிர்நோக்கி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026 (Visit Malaysia 2026) திட்டத்தை நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில், உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் இத்துறை முடங்குவது கவலையளிப்பதாக உள்ளது. 

எனவே, பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பேருந்துகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியம் (Targeted Subsidy) வழங்கப்பட வேண்டும் என்றும், தற்காலிக நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரி பிரதமர், சுற்றுலா அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாகப் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset