நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பாதுகாப்பு அரணாக நின்ற அந்நியர்கள்

சிரம்பான்: 

ஈகைத் திருநாளின் மூன்றாம் நாளில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த தம்பதியினருக்கு, அடையாளம் தெரியாத ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஈப்போவிலிருந்து செம்போங்கில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தடைந்த முஹம்மத் ஷாஃபிக் அப்துல்லாஹ் (25) என்பவரின் மனைவிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சிரம்பான் துங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, சாலைகளில் காணப்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் அவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

பதற்றத்துடன் அபாய விளக்குகளை (Hazard Lights) ஒளிரவிட்டபடி காரைச் செலுத்திய ஷபிக், எதிரே வந்த வாகனங்களிடம் வழி கேட்டுத் தவித்துள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், உடனடியாக உதவிக்கு முன்வந்து போக்குவரத்தைச் சீர்செய்து, வாகனத்தைக் கடக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தார். 

அவரைத் தொடர்ந்து மேலும் ஐந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் தானாக முன்வந்து அந்தத் தம்பதியினரின் காருக்குப் பாதுகாப்பு அரணாக மாறி, சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை மருத்துவமனைக்குச் செல்லும் வழியைச் சீர்செய்தனர்.

பொதுவாக இரண்டு மணி நேரம் எடுக்கக்கூடிய அந்தப் பயணத்தை, இவர்களின் உதவியால் வெறும் 20 நிமிடங்களில் கடந்து இரவு 8.50 மணிக்கு தம்பதியினர் மருத்துவமனையை அடைந்தனர்.

அங்கு அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு எவ்வித அறிமுகமும் இல்லாத நபர்கள் செய்த இந்த உதவி, மலேசியர்களிடையே இன்னும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துவதாகக் கண்ணீர் மல்க ஷாஃபிக் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் கைகொடுத்த அந்த ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கும், வழிவிடத் துணையாக நின்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அக் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இச்சம்பவம் இந்த ஆண்டு பெருநாளின் மறக்க முடியாத நினைவாகத் தங்களுக்கு அமைந்துவிட்டதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset