நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

தேனீ வளர்ப்புத் தொழில் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ஈட்டும் கிராமத்துப் பெண்மணி

ஆக்ரா:

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரி சிங் (38) என்ற பெண்மணி, கடும் நிதி நெருக்கடிகளைக் கடந்து இன்று வெற்றிகரமான ஒரு தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார். 

2020-ஆம் ஆண்டு வரை விவசாயக் கூலித் தொழிலாளியான தனது கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த இவரது குடும்பம், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தது. இந்தச் சூழலில் இருந்து மீள முடிவெடுத்த ராஜேந்திரி சிங், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவியுடன் மற்ற பெண்களை ஒருங்கிணைத்துத் தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் வெறும் 30,000 ரூபாய் நிதி உதவி, வங்கிக் கடன்கள் மூலம் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று 400-க்கும் மேற்பட்ட தேனீப் பெட்டிகளுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 

இவரது தயாரிப்பான ‘கௌஷிக் ஹனி’ (Kaushik Honey) எனும் தேன் வகை, தற்போது ஆக்ரா, மதுரா, டெல்லி, ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வரும் இவர், தனது நிறுவனத்தில் ஐந்து பணியாளர்களையும் நியமித்துள்ளார். இவரது கணவர் தற்போது கணக்கு, சந்தைப்படுத்தல் பணிகளில் இவருக்குத் துணையாகச் செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசின் ‘லக்பதி தீதி’ திட்டத்தின் பயனாளியான ராஜேந்திரி சிங், சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பகிர்கையில், அரசாங்கத்தின் முறையான ஆதரவும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு பெண்ணும் பொருளாதார ரீதியாகத் வெற்றி அடைய முடியும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், ராஜேந்திரி சிங்கின் இந்த வெற்றிப் பயணம் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset