நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸில் கடும் வறட்சி: அணைக்கட்டு நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது

பாடாங் பெசார்:

பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் பகுதியில் அமைந்துள்ள தீமா தாசோ அணைக்கட்டில், நிலவி வரும் கடும் வெப்பம், நீண்டகால வறட்சி காரணமாக நீர்மட்டம் பெருமளவில் சரிந்து வருகின்றது. 

இந்த நீர்ச் சரிவு, அணைக்கட்டுப் பகுதியில் உள்ள சரணாலயக் கூண்டுகளில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான நன்னீர் மீன்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு நீர்மட்டம் மிக வேகமாகச் சரிந்து வருவதாக உள்ளூர் மீனவர் சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் அஷார் அப்துல் அஜிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது கோடைக்காலத்தின் தொடக்க நிலையிலேயே நீர்மட்டம் சுமார் 60 மீட்டர் வரை குறைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அணைக்கட்டின் தரைப்பகுதி முழுமையாகத் தென்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வேளாண்மைத் தேவைகளுக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படுவதும், மழை பெய்ததும் இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

நீர்மட்டம் தொடர்ந்து குறைந்தால், அணைக்கட்டின் அடிப்பகுதியில் புற்கள் வளரத் தொடங்கும் என்றும், இதனால் நீரின் தரம் அமிலத் தன்மை கொண்டதாக மாறி மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் மீனவர்கள் எச்சரிக்கின்றனர்.

சூழல் இவ்வாறிருக்க, பெர்லிஸ் மாநில நீர்ப்பாசன, வடிகால் துறை (JPS) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக நீர்ச் சிக்கன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போதிய மழையின்மை, நீண்டகால வறட்சியால் அணைக்கட்டின் இருப்பு கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதை உறுதிப்படுத்திய அந்நிறுவனம், அன்றாடத் தேவைகளுக்காகப் போதிய நீர் கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, பொதுமக்கள் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மழைக்காலம் தொடங்கும் வரை இந்த நெருக்கடி நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset