செய்திகள் வணிகம்
40 டிகிரி செல்சியஸ் வெப்பம்: கெடா மாநிலத்தில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது
கோலா நெராங்:
கெடா மாநிலத்தின் பாடாங் தெராப் பகுதியில் வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, தாகத்தைத் தணிக்க மக்கள் இளநீரை நாடுவதால் அதன் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இளநீர் வியாபாரி ரோஸ்லி மூசா கூறுகையில், கடை திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே பத்து இளநீர்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும், தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடுமையான வெப்பம் காரணமாக, ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களும் களையிழந்து காணப்படுகின்றன. வழக்கமாக வீடுகளுக்கு வெளியே பந்தல் அமைத்து விருந்தினர்களை வரவேற்கும் மக்கள், இம்முறை வெப்பம் தாங்க முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
சிறுவர்கள் வீடு வீடாகச் சென்று பெருநாள் பணம் வாங்கும் வழக்கமும் இந்த வெயிலால் குறைந்துள்ளதாகப் பகுதிவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். துணிகளைத் துவைத்துப் போட்டால் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே காய்ந்துவிடும் அளவுக்கு வெயில் கொளுத்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் , பாடாங் தெராப் பகுதியில் இரண்டாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தவிர பாலிங், சிக், லங்காவி உள்ளிட்ட 12 பகுதிகளில் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அடிக்கடி குளிப்பதன் மூலமும், அதிகப்படியான நீரைப் பருகுவதன் மூலமும் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பகல் நேரங்களில் குறிப்பாக 2 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், மின்விசிறிகள், குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல வீடுகள் வெப்பம் உள்ளே வராதபடி கதவுகளை மூடி வைத்துள்ளதால், எப்போதும் களைகட்டும் பெருநாள் வீதிகள் இம்முறை வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
