செய்திகள் சிந்தனைகள்
அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் ஈரான் தகர்த்தெறிந்தது
அமெரிக்காவின் Military Industrial Complex என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு மாபெரும் கார்ப்பரேட் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
போர்களை உருவாக்கி, அதன் மூலம் ஆயுதங்களை விற்று கல்லா கட்டுவதுதான் இவர்களின் பிரதான வேலை.
இதில் மிக முக்கியமான ஒரு தந்திரம் என்னவென்றால், ஒரு சாதாரண ஆயுதத்தைக்கூட "தொழில்நுட்ப அதிசயம்" என்று உலக நாடுகளுக்கு விற்று பல மடங்கு லாபம் பார்ப்பது இவர்களது வாடிக்கை.
அமெரிக்க ஆயுதங்களின் பலத்தை உலகிற்குப் பறைசாற்ற 'Top Gun' போன்ற ஹாலிவுட் படங்கள் ஆயுத விற்பனைக்கான விளம்பர தளங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
இப்படங்களில் காட்டப்படும் போர் விமானங்கள் எவராலும் வீழ்த்த முடியாதவை, ரேடார்களில் சிக்காதவை என்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
இதன் மூலம் உலக நாடுகளை மிரள வைத்து, சில கோடி டாலர்களில் உருவாக்கப்பட்டு பல நூறு கோடி டாலர்களுக்கு அந்த ஆயுதங்களை விற்பனை செய்கிறார்கள்.
இதற்குத் துணை போக 'Paid Defence Analysts' மூலம் அந்த ஆயுதங்களுக்குத் தொடர்ச்சியாக செயற்கையான பில்டப்கள் கொடுக்கப்படுகின்றன.
சமீபத்திய ஈரானுக்கு எதிரான போர் சூழலில், F-35 விமானம் பற்றி அமெரிக்கா சொன்ன கதைகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்துள்ளன.
மார்ச் 4 அன்று, ஒரு இஸ்ரேலிய F-35 விமானம் ரஸ்யா தயாரிப்பான ஈரானின் Yak-130 விமானம் மீது தாக்குதல் நடத்தியபோது அது ஒரு 'வரலாற்று சாதனை' என்றும், ஈரானின் வான்வெளி பாதுகாப்பு முடிந்துவிட்டது என்றும் அமெரிக்கத் தரப்பு கொண்டாடியது.
ஏனெனில் F35 விமானத்தின் வரலாற்றில் முதல்முதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்வே அது.
மார்ச் 19 அன்று, அமெரிக்காவின் F-35 போர் விமானம் ஈரான் மீது தாக்குதல் நடத்தச் சென்றபோது, அது ஈரானியப் படைகளால் தாக்கப்பட்டது. சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள, "யாராலும் தொட முடியாது" என்று சொல்லப்பட்ட இந்த 'Stealth' விமானம், சேதமடைந்து அவசர அவசரமாகத் தரையிறங்கியது.
உண்மை என்னவென்றால் ஈரானின் நடமாடும் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Road-mobile air defenses) எங்கே இருக்கின்றன என்பதை அமெரிக்காவின் அதிநவீன ரேடார்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறைந்திருந்து தாக்கும் ஈரானிய ஏவுகணைகளுக்கு முன்னால், F-35-ன் மறைந்து செல்லும் தொழில்நுட்பம் (Stealth) எடுபடவில்லை என்பதே நிதர்சனம்.
இந்தக் குறுகிய காலப் போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் சந்தித்த இழப்புகள் ஏராளம்:
1. மூன்று F-15 விமானங்கள் இழப்பு.
2. ஈராக்கில் KC-135 டேங்கர் விமானம் விபத்துக்குள்ளாகி 6 பேர் பலி.
3. தொடர்ச்சியாக வீழ்த்தப்படும் MQ-9 Reaper ட்ரோன்கள்.
ஞ
4. தற்போது, வீழ்த்த முடியாதது என்று கூறப்பட்ட F-35 விமானத்திற்கே ஏற்பட்ட பாதிப்பு.
அமெரிக்கா உலக நாடுகளுக்கு விற்கும் ஆயுதங்கள் உண்மையில் அவற்றின் விலைக்கு ஏற்ற தரம் கொண்டவைதானா? அல்லது ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி உலக நாடுகளின் வரிப்பணத்தைச் சுரண்டுகிறார்களா? என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
ஈரானின் பதில் அடி, அமெரிக்காவின் "வான்வெளி ஆதிக்கம்" (Air Superiority) என்ற கதையின் ஓட்டைகளை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
ஈரானின் மறைந்திருந்து தாக்கும் எளிய தொழில்நுட்பங்களுக்கு முன்னால், பில்லியன் டாலர் பட்ஜெட் கொண்ட அமெரிக்காவின் 'Stealth ' போர் விமானங்கள் வெறும் paper plane ற்கு இணையானதாக மாறிவிட்டது.
எந்த நேரமும் இந்த F35 விமானங்கள் சுட்டுவிழுத்தப்படலாம்.
அமெரிக்கா தனது ராணுவ பலத்தையும், நவீன ஆயுதங்களையும் காட்டி உலகையே மிரட்ட நினைப்பது இது முதல் முறையல்ல.
ஆனால் வரலாறு சொல்லும் பாடம் வேறு
"தொழில்நுட்பம் மட்டுமே போரை வென்று தந்துவிடாது."
அமெரிக்காவின் F-35 போர் விமானத்தின் விலை சுமார் 100 மில்லியன் டொலர்கள ஆனால், ஈரானின் மிக எளிய, குறைந்த விலை ஏவுகணைகள் இதனைச் சேதப்படுத்தும்போது, மற்ற நாடுகள் யோசிக்கத் தொடங்கிவிட்டன.
"அதிநவீனத் தொழில்நுட்பம் என்று இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியும் பயன் இல்லையென்றால், ஏன் அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும்?" என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது.
F-35-ன் பலவீனம் அம்பலமானால், ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகள் தங்கள் கொள்முதல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யக்கூடும்.
போர் முனையில் அமெரிக்க ஆயுதங்கள் தோல்வியடையும் செய்திகள் வரும்போது, இந்த நிறுவனங்களின் பங்குகள் மளமளவெனச் சரிந்து, அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
"ஒரு விலையுயர்ந்த அமெரிக்க விமானத்தை வீழ்த்த நூறு மலிவு விலை ட்ரோன்கள் போதும்" என்ற புதிய போர் வியூகம், அமெரிக்காவின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
வியட்நாம் முதல் ஆப்கானிஸ்தான் வரை , கம்போடியா முதல் சோமாலியா வரை அமெரிக்கா சந்தித்த அவமானகரமான தோல்விகள், இப்போது ஈரான் மண்ணிலும் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
வரலாறு மீண்டும் திரும்புகிறது. வியட்நாமிலும் சோமாலியாவிலும் , ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய அடியை விடப் பெரிய அடியை ஈரான் மண்ணில் அமெரிக்கா வாங்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
F-35 விமானங்கள் வீழ்வது வெறும் ஆரம்பம்.
வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும், இழந்தது கௌரவத்தை மட்டுமே.
ஆனால் ஈரானில் அமெரிக்கா இழக்கப்போவது தனது பொருளாதாரப் பலத்தையும், உலக ஆயுதச் சந்தையில் தனக்கிருந்த முதலிடத்தையும் தான்.
பிம்பங்கள் உடையத் தொடங்கிவிட்டன, இனி உண்மை நிலவரம் உலகிற்குத் தெரியும்.
- முகிந்தன் துரைராஜ்சிங்கம்
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 7:09 am
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்? எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
February 20, 2026, 11:49 am
பூத்து வருகிறது, புண்ணிய மாதம் - வெள்ளிச் சிந்தனை
February 13, 2026, 11:57 am
உணவை வீணாக்கினால் ஃபிரான்சில் அபராதம்: நோன்பில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
February 6, 2026, 4:50 pm
பெர்மிமில் நடப்பது என்ன? துவக்கப்பட்ட நோக்கத்தை விட்டு பெர்மிம் விலகிச் செல்கிறதா?
February 6, 2026, 7:41 am
மனிதக் குழந்தையும் சிம்பன்சி குட்டியும் - வெள்ளிச் சிந்தனை
January 30, 2026, 8:37 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள்
January 28, 2026, 10:21 pm
