நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு: டத்தோஸ்ரீ ரமணனின் உகாதி வாழ்த்து

கோலாலம்பூர்:

தெலுங்குப் புத்தாண்டு நாளை மலரும் இவ்வேளையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நமது தொன்மையான பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத் திறன்களோடு இணைப்பதன் அவசியத்தை ஆழமாக வலியுறுத்தியுள்ளார்.

உகாதி திருநாளின் முக்கியத்துவமான 'புத்துயிர் பெறுதல்' - 'வாழ்க்கைச் சமநிலை' ஆகியவற்றை வெறும் சடங்குகளாக மட்டும் பார்க்காமல், நமது இந்தியச் சமூகம் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்க உதவும் ஒரு உந்துசக்தியாக மாற்ற வேண்டும்.

இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரு பெரிய குடும்பம் என்பதை அமைச்சர் ரமணன் தனது செய்தியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

"தெலுங்குச் சமூகம், மலேசிய இந்தியச் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளும் ஒரே குடும்பமாக, ஒரே குரலாக எழ வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நமது அடையாளமான பண்பாட்டு வேர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதே சமயம் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்.

நாம் அனைவரும் ஒருமித்த சக்தியாக முன்னேற வேண்டிய தருணம் இது என்று அவர் தனது உரையில் விவரித்தார்.

சமூக மேம்பாட்டில் தமக்குள்ள தீவிரப் பற்றை வெளிப்படுத்தும் வகையில், 'வெற்றி மடானி' திட்டத்தை ஒரு முக்கிய மாற்றத்திற்கான கருவியாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் முன்வைத்துள்ளார்.

இத்திட்டம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட செமிகண்டக்டர், போன்ற உயர்தரத் துறைகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு தளமாகும். 13ஆவது மலேசியத் திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, இந்தத் தொழில்நுட்பங்களே நமது சமூகத்தின் பொருளாதார உயர்வுக்குத் தேவையான வலிமையான 'சிறகுகளாக' அமையும்.

இந்தியச் சமூகத்திற்காக இன்னும் பல பிரம்மாண்டமான திட்டங்கள் தற்போது தீவிரமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.

"தாமதிப்பதற்கான நேரம் கடந்துவிட்டது. இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதரும் 'வெற்றி' பெறுவதை உறுதி செய்வதே எனது தொடர்ச்சியான கடப்பாடாகும்.

மலேசியாவின் பல்லினக் கலாச்சாரத்தில் இந்தியச் சமூகத்தின் தனித்துவத்தைப் போற்றும் வகையில், அனைத்துத் தெலுங்குப் பெருமக்களுக்கும் தனது மனமார்ந்த 'உகாதி' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், தமது அர்ப்பணிப்பான சேவையைத் தொடரப் போவதாக உறுதி அளித்தார்.

உறுதியான பண்பாட்டு வேர்களுடன், நவீன தொழில்நுட்பச் சிறகுகளைக் கொண்டு இந்தியச் சமூகம் 'மடானி' மலேசியாவின் ஒரு முக்கியத் தூணாகத் திகழும் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset