நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தோனேசிய ஆடவர் மீது வழக்கு

தெலுக் இந்தான்: 

தெலுக் இந்தானில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி ஒருவரின் உயிரிழப்பிற்கும், மற்றொருவரின் காயத்திற்கும் காரணமான 39 வயது இந்தோனேசிய ஆடவர் மீது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 9-ஆம் தேதி காலை 8:10 மணியளவில், கம்போங் செலபாக் பகுதியில் சுதியோனோ என்பவர் தனது மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அடாம் ஃபைசல் என்பவர் உயிரிழந்தார்; மேலும் முஹம்மட் மு’அம்மர் இஸ்மாயில் என்பவர் காயமடைந்தார்.

முதல் குற்றச்சாட்டின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது குற்றச்சாட்டில், 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. 

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் காது கேளாமைப் பிரச்சனை இருந்ததால், நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமிருந்து எந்தப் பதிலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5,000 ரிங்கிட் பிணைத் தொகையை அனுமதித்தது. இரு மலேசியப் பிணையாளர்களில் ஒருவர் அவரது முதலாளியாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. 

மேலும், உடற்கூறாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், இந்தோனேசிய மொழிபெயர்ப்பாளர், சைகை மொழி நிபுணரின் உதவியைப் பெறவும் ஏப்ரல் 28-ஆம் தேதியை நீதிமன்றம் மறுதேதியாக நிர்ணயித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset