நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்கு போர்: நாட்டின் நீர் சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு

புத்ராஜெயா: 

மத்திய கிழக்கில் நடைபெறும் போர் மோதல்கள், நாட்டின் நீர் சேவைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இரசாயனப் பொருட்கள் கையிருப்பு, இயந்திர, மின்சார உதிரிபாகங்களின் கிடைப்பில் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

இதனையடுத்து, தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN), தற்போதைய ஹோர்முஸ் நீரிணை வர்த்தக பாதை பதற்ற நிலையை முன்னிட்டு, நீர் சேவை இயக்குநர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள், உதிரிபாகங்கள் போதுமான அளவில் கையிருப்பில் இருக்க வேண்டும் என SPAN வலியுறுத்தியுள்ளது.

“பொதுவாக, நீர் சேவைத் துறை சர்வதேச சந்தையை இரண்டு முக்கிய அம்சங்களில் சார்ந்துள்ளது. அதாவது, நீர் சுத்திகரிப்பு, விநியோகத்திற்கு எரிபொருள், மேலும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குழாய்கள் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், உதிரிபாகங்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய கண்காணிப்பின் அடிப்படையில், எரிபொருளின் விலை உயர்வு கட்டுப்பாட்டில் இருப்பதால் உடனடி பெரிய தாக்கம் இல்லை எனவும், உதிரிபாகங்கள், இரசாயனங்களின் விலை அதிகரிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இன்னும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SPAN தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், போர் நீடித்தால் நீர் சேவைத் துறைக்கு நேரடி சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பை மறுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

செலவுகள் திடீரென அதிகரித்தால், அது நீர் சேவை நிறுவனங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தேவையெனில் எரிசக்தி மாற்றம், நீர் மாற்ற அமைச்சகத்துக்கு (PETRA) பரிந்துரைகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், பயனாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதோடு, நீர் சேவைத் துறை தொடர்ந்து சீரான சேவையை வழங்க உதவும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“PETRA, SPAN நீர் சேவைத் துறையைப் பாதிக்கக்கூடிய அபாயங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து, சேவை தடையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்,” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், பண்டிகை காலங்களில் குறிப்பாக நீர், எரிசக்தியைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் SPAN கேட்டுக் கொண்டுள்ளது. உலகளாவிய நெருக்கடியை முன்னிட்டு, பொறுப்பான பயன்பாடு அனைவருக்கும் போதுமான வழங்கலை உறுதிப்படுத்தவும், செயல்பாட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset